நடப்பு நிதி ஆண்டில் 11,703 கோடி ரூபாய் மதிப்பிலான 67 அன்னிய நேரடி முதலீடுகளுக்கு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் எளித்த மாநிலங்களுக்கான மத்திய நிதி அமைச்சர் பி ராதாகிருஷ்ணன் 11,703 கோடி ரூபாய் மதிப்பிலான 67 அன்னிய நேரடி முதலீடுகளுக்கு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
அதில் 532 கோடி ரூபாய் மெட்டஃபினிட்டி பிரைவேட் லிமிடட் எனப்படும் முதலீட்டு நிறுவனத்திற்கு நேரடி அன்னிய முதலீடுகள் கீழ் இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்கள் கீழ் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம் என்று உள்ள உச்சவரம்பை உயர்த்தும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதே இந்தத் திட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை மூத்த குடிமக்களால் திறக்க முடியும்.
அனைத்துப் பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் கீழ் முதலீடு செய்ய முடியும்.