இந்திய டெலிகாம் சந்தையில் வெடித்த விலை போர் புரட்சியில் கடைசி வரையில் தாக்குப்பிடித்த மிகச் சிறிய நிறுவனமான ஏர்செல் தற்போது மிகப்பெரிய கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடி பிரச்சனையில் சிக்கியுள்ளது.
இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தில் இருக்கும் 5000 ஊழியர்களுக்கும் அதன் நிர்வாகம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கை..
ஏர்செல்-இன் உண்மை நிலைய உணர்த்தும் வகையில் நிறுவனத்தில் பணியாற்றும் 5000 ஊழியர்களுக்கும் நிர்வாகம் அளித்த எச்சரிக்கையில்,
மோசமாகக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள், நிறுவனத்தில் நிதிப் பற்றாக்குறையின் அளவு அதிகமாக உள்ளது. மேலும் போட்டியின் காரணமாக வர்த்தகமும் தொடர்ந்து குறைந்து வருவதாக ஏர்செல் நிர்வாகம் அதன் ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளது.
சிஇஓ
கடந்த சில காலமாகவே நிறுவனத்தின் நிதிப் பற்றாக்குறை அதிகமாகவே உள்ளது, மேலும் நிதி தேவைக்குத் தற்போது இருக்கும் வர்த்தகத்தை மட்டுமே நம்பி இயங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என ஏர்செல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கைசத் ஹீர்ஜி ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
போட்டியில் அதீத பாதிப்பு
மேக்சிஸ் நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர்செல் நிறுவனம், டெலிகாம் சந்தையில் ஜியோ அறிமுகம் ஆன பிறகு உருவாக்கிய போட்டியில் ஏர்செல் வர்த்தக அளவுகளிலும் சரி, நிதி நிலையிலும் சரி அதிகளவிலான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.
15,500 கோடி ரூபாய் கடன்
ஏர்செல் நிறுவனத்தின் 15,500 கோடி ரூபாய் கடனை மறுசீரமைப்புச் செய்ய நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்களிடம் 2017ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் முதலே ஏர்செல் நிர்வாகம் போராடி வருகிறது. ஆனால் இப்பேச்சுவார்த்தையும் பலன் அளிக்கவில்லை.
இதுவும் இந்நிறுவனத்தின் இன்றைய மோசமான நிதி நிலைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
சேவை நிறுத்தம்
நிதிப் பற்றாக்குறை மற்றும் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை அளிக்கும் நோக்கில் சில மாதங்களுக்கும் முன்பு ஏர்செல் சுமார் 6 வட்டங்களில் தனது சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
மொபைல் டவர்கள்
ஜிடிஎல் இன்பரா, பார்தி இன்பராடெல், இன்டஸ் டவர்ஸ் மற்றும் ஏடிசி ஆகிய நிறுவனங்களிடம் இருந்து ஏர்செல் சுமார் 40,000 டவர்களைக் குத்தகைக்கு எடுத்து தனது வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்து வருகிறது.
சேவை செய்யும் இடங்களைக் குறைத்துக்கொள்ளும் நிலையில் செலவுகளும் குறையும், இப்படிதான் கடந்த 6 மாத வர்த்தகம் செய்து வருகிறது ஏர்செல்.