உத்திர பிரதேசத்தில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ கீழ் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாகவும், அதே போன்று அதானி 35,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும் 1.50 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உத்திர பிரதேசத்தில் டிஜிட்டல் கட்டுமானத்திற்கான 20,000 கோடி ரூபாயினை முதலீடு செய்துள்ள நிலையில் 10,000 கோடி ரூபாயினை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் கீழ் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானி
உத்திர பிரதேசத்தின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முகேஷ் அம்பானி பிரதமர் நரேந்திர மோடிக்கும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கும் ஜியோ டிஜிட்டல் ரெவல்யூஷன் மூலமாகத் தன்னால் முடிந்த வரை பங்கீட்டை அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள ஒரே நிறுவனம் ஜியோ தான் என்றும் அதற்காகப் பெருமைப்படுவதாகவும் அம்பானி கூறியுள்ளார்.
அதானி குழுமம்
உத்திர பிரதேசத்தில் அதானி குழுமம் முதலீடு செய்ய உள்ள 35,000 கோடி ரூபாயும் ஒரு குறிப்பிட்ட துறை என்று இல்லாமல் பல் துறைகளில் முதலீடு செய்வதாக அதானி கூறியுள்ளார்.
முதலீடார் மாநாடு 2018-ல் பங்கேற்ற அதானி மின்சாரம், லாஜிஸ்டிக்ஸ், சோலார் பவர், சாலை மற்றும் விவசாயத் துறை என அடுத்த 5 வருடத்திற்கு இந்த முதலீடுகளை உத்திர பிரதேசத்தில் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
உத்திர பிரதேசம்
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தில் நாட்டின் 17 சதவீத மக்கள் தொகை உள்ளனர். இந்தியாவின் வளர்ச்சியில் இவர்கள் பங்கு இல்லாமல் இருக்க முடியாது என்றும் அதானி குறிப்பிட்டுள்ளார்.