வட கொரியா, கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து காதுகளில் வழுந்துக்கொண்டு இருக்கும் ஒரு சொல். அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகளில் அதிபர்கள் மத்தியில் வெடித்த கருத்து வேறுபாடு, ஏவுகணை சோதனை, ஏவுகணை குறித்து டிரம்ப்-இன் பேச்சு, வட கொரியாவின் ராணுவ அணிவகுப்பு ஆகியவை 3ஆம் உலகப் போருக்கு வித்திட்டது போலவே இருந்தது.
ஆனால் எவ்விதமான பிரச்சனைகளும் இல்லாமல் இருநாடுகளுக்கும் மத்தியிலான கருந்து வேறுபாடுகள் தற்போது அமைதியாகியுள்ளது. வட கொரியாவிற்கு அதன் அண்டை நாடான தென் கொரியாவுடன் பிரச்சனை இருந்தாலும் சீனாவுடன் உறுதியான நட்புறவு உள்ளது.
இப்படிச் சர்ச்சைகளுக்கும், மர்மங்களுக்கும் பஞ்சமில்லா வட கொரியாவின் உண்மையான முகம் எப்படிப்பட்டது தெரியுமா..?
வட கொரியா எல்லை பங்கீடு
அதிகாரப்பூர்வமாக "ஜனநாயக மக்கள் கொரிய குடியரசு " (DPRK - Democratic People's Republic of Korea) என அழைக்கப்படும் குட்டி நாடு வடகொரியா. வடக்கில் சீனா, தெற்கே தென்கொரியா, வடகிழக்கே ரஷ்யாவால் சூழப்பட்டு, 2.5 கோடி மக்கள்தொகை கொண்டது.
கம்யூனிஸ்ட் நாடா?
"ஜூஷே"(Juche) / சுயநம்பிக்கை எனும் கொள்கையின்படி, 1948லிருந்து கிம்மின் குடும்பம் வடகொரியாவை ஆண்டு வருகிறது. வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம் என அனைத்திலும் முழுச் சுதந்திரத்தை நோக்கமாகக் கொண்ட நாடு. சமீப ஆண்டுகளாக, உணவு பற்றாக்குறை மற்றும் சரிசமமற்ற வருமானம் காரணமாகச் சில கொள்கை மாற்றங்களைச் செயல்படுத்தின.
கொரிய போரின் தாக்கங்கள்
1953ம் ஆண்டில் போர் முடிந்த பின்பு, சீனாவும் சோவியத் யூனியனும் நேசக்கரம் நீட்டின. ஆரம்பத்தில் செழிப்பாக இருந்த நாடும் அதன் பொருளாதாரமும், பொறுப்பற்ற நிர்வாகம், இயற்கை இடர்பாடுகளால் தள்ளாடத்துவங்கியது.
உள்நாட்டுப்புரட்சி காரணமாகச் சோவியத் யூனியன் உதவியும் தடைப்பட, உணவுபற்றாக்குறையும் பஞ்சமும் தலை விரித்து ஆடியது. பின் சோவியத் யூனியன் வீழ்ச்சியால் வடகொரியாவின் பொருளாதாரம் முடங்கி, பஞ்சத்தால் 6 லட்சம் முதல் 10லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.
வணிகத் தொடர்புகள்
ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும், வடகொரியா மீது பொருளாதாரத் தடைவிதித்தபோதும் சீனா இன்னமும் வர்த்தகம் செய்கிறது. நாட்டின் 83% ஏற்றுமதி (2.34 பில்லியன் டாலர்) சீனாவுடனும், இந்தியாவுடன் 97.8 மில்லியன் டாலரும், பாகிஸ்தானுடன் 43.1 மில்லியன் டாலரும், பார்க்கினாவுடன் (Burkina Faso) 26.7 மில்லியன் டாலர் வர்த்தகம் செய்கிறது. நிலக்கரியும், ஆடைகளும் முக்கிய ஏற்றுமதியாகவும், பெட்ரோல், செயற்கை நூலிழை இறக்குமதியாகவும் உள்ளது.
நேர மண்டலம்
ஜப்பானிடம் இருந்து சுதந்திரம் பெற்றதின் 70ம் ஆண்டு நினைவாக , ஆகஸ்ட் 15, 2015 முதல் தனக்கென "பியொங்யாங்" எனப் புதிய நேரமண்டலத்தை உருவாக்கியுள்ளது. ஜப்பான் மற்றும் தென்கொரியாவும் இதே நேர அமைப்பைக் கொண்டிருந்தாலும், வடகொரியா தன் நேரத்தை 30 நிமிடம் பின்நோக்கி GMT+08:30 என அமைத்துள்ளது.
தனி நாள்காட்டியுமா?
வடகொரியா தனக்கென ஜூஷே எனும் நாள்காட்டியை 1997 முதல் பின்பற்றி வருகிறது. 2-ம் கிம் ஜாங் பிறந்த ஆண்டான 1912ஐ அடிப்படையாகக் கொண்டு ஜூஷே 1 கணக்கிடப்பட்டுள்ளது. (2018ம் ஆண்டு ஜூஷே107) ஆனால், அதற்கு முன்பான காலம் வரையறுக்கப்படவில்லை.
சராசரி வடகொரிய மக்களின் வாழ்க்கைத்தரம்
ஊரகப் பகுதியில் வாழும் மக்கள் அன்றாடத் தேவைகளுக்கே சிரமப்படுகின்றனர். அங்குள்ள அகதிகளுடன் பணியாற்றிய சோக்கில் பார்க் என்பவர் கூறும் போது, மக்கள் சீனாவிற்குக் கடத்தல் தொழில் செய்து வருவதாகவும், பெரும்பான்மையான மக்கள் கைபேசி, கணினிகள் பயன்படுத்துவதாகவும் கூறுகிறார்.
சரக்குகள் உடனுக்குடன் தீர்ந்துவிடுவதால் , மக்கள் எப்போதும் பொருட்கள் வாங்க அலைமோதுகின்றனர். மின்பற்றாக்குறை காரணமாகச் சீக்கிரம் உறங்க செல்வதாகவும் கூறுகிறார். ஜீன்ஸ் அணிவது மேற்கத்திய கலாச்சாரம் என்பதால் அதற்குத் தடை உள்ளது. குட்டைபாவாடையின் நீளம், ஷூக்களின் அளவு, டீ சர்டுக்கள் என அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது.
உணவு பற்றாக்குறை
தென்கொரிய பல்கலைக்கழக ஆய்வின்படி, வடகொரிய மக்கள் தென்கொரியர்களைக் காட்டிலும் 2 இன்ச் குள்ளமாக உள்ளனர். உலக உணவுத் திட்டத்தின் அளவீடுகளின் படி, 6 லட்சம் மக்கள் புரதகுறைபாடு உள்ளவர்கள் எனவும், மோசமான உணவு முறையால் மூன்றில் ஒரு குழந்தை குறைபாட்டுடன் பிறப்பதாகவும் கூறப்படுகிறது.
நகர மக்களின் வாழ்க்கைமுறை
தலைநகர் பியொங்யாங்கில் வசிக்கும் மக்கள்தான் தேசபற்றாளர்கள் போலும். ஏனெனில் அவர்களே வீடு, இணையம், மின்சாரம் என வசதிகளோடு வாழ்கின்றனர். எனினும், மின் பற்றாக்குறையால் இரவு 10 மணிக்கே உறங்கிவிடுகின்றனர். அரசு அலுவலர்கள், இராணுவத்தினர், தொழிலதிபர்கள் மட்டுமே உயர்தர ஆடைகள், வெளிநாடு பயணம் என ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர்.
மக்கள் எப்படி வெளியேறுகிறார்கள்?
தென்கொரியாவில் அதிகாரப்பூர்வமாக 30,000 வடகொரியர்கள் இருக்கின்றனர். அரிதாகவே மக்கள் ராணுவ எல்லையைக் கடந்து வெளியேறுவார்கள். பொதுவாக, இடைத்தரகர்கள் உதவியோடு சீனாவின் யாலு நதியை கடப்பர். சீனா வழியாகத் தாய்லாந்து செல்ல ஒருவருக்கு 2000 டாலர் வசூலிக்கின்றனர். சீனாவில் வசிக்க விரும்புவோர் மீண்டும் வடகொரியா திரும்புவது மிகவும் அபாயமானது.
வடகொரியாவை விட்டு வெளியேறுவது எவ்வளவு அபாயமானது
கிம் ஜாங் உன் அதிபராகப் பதவியேற்ற பின் தெற்கு எல்லை முழுதும் கம்பிவேலி இடப்பட்டுள்ளது. சீன தொலைப்பேசி உபயோகிப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றனர். சீனா வடகொரிய அகதிகளைச் சட்டவிரோத வெளிநாட்டவராகக் கருதுவதால், பெண்கள் சீனர்களைத் திருமணம் செய்யக் கட்டாயப்படுத்துகிறார்கள்.
தேசவிரோதிகள் , அரசு எதிர்ப்பாளர்கள்
கண்டிப்பான ஆட்சியின் காரணமாக அனைவரும் பயத்தில் உள்ளனர். எதிர்ப்பாளர்களுக்குப் பொது இடத்தில் தண்டனை, இராணுவ முகாமில் அடைப்பது, சீர்திருத்த முகாமில் அடைக்கப்படுகின்றனர். நேஷனல் ஜியோகிராபி ஆவணத்தின்படி 20,000 கைதிகள் மின் வேலிகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வடகொரியா செல்வது எப்படி?
அமெரிக்கா உள்படப் பல நாடுகள் வடகொரியா செல்வதைத் தவிர்க்குமாறு தம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன. ஆயினும், வருடம் 1லட்சம் பயணிகள் வருகின்றன. தனித்துப் பயணம் செய்ய அனுமதி இல்லாததால், குழுவாகச் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வாயிலாகச் செல்ல வேண்டும். அவர்களுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகளும் , அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே வடகொரிய வழிகாட்டியின் மேற்பார்வையில் செல்ல இயலும்.
வடகொரியாவில் வெளிநாட்டவர்கள்
சுற்றுலா செல்லும் பயணிகள் அங்கு உள்ள ஆபத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும், வெளிநாட்டவர் வாயிலாகத்தான் அம்மக்கள் வெளியுலகச் செய்திகளை அறிந்துகொள்கிறார்கள். அந்நாட்டு அரசால் கண்காணிக்கப்பட்டாலும், பயணிகள் இந்தத் தேசத்தைப் பார்க்க ஆவலாகச் செல்கின்றனர்.
அமெரிக்க - வடகொரிய முரண்பாடு
1950ல் நடந்த கொரிய போரில் அமெரிக்கா சியோல் நாட்டுடன் இணைந்து பணியாற்றியது முதல் தென்கொரிய நாட்டில் தனது ராணுவத்தை நிறுத்தியிருப்பது, பல்வேறு வர்த்தகத் தொடர்புகள் வரை அனைத்தும் முரண் தான்.
கிம் ஜாங் உன் அதிபரான பின் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகள் இரு நாடுகளுக்கு மத்தியில் மேலும் விரிசலை அதிகரித்துள்ளது.
வடகொரியாவிற்கு எதற்கு ஏவுகணைகள்?
பலம்வாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ள நாடுகள் சுற்றியுள்ள போது, தனது பாதுகாப்பை உறுதி செய்ய ஏவுகணைகள் தேவை என வடகொரியா எண்ணுகிறது. தென்கொரியாவுடன் நிலவும் போர்பதற்றமும், அதன் பயமுறுத்துதலில் இருந்து தப்பவும் , தானும் ஒரு அணுசக்தி நாடு எனப் பிரகடனபடுத்தவும் ஏவுகணைகள் உதவும் என நம்புகிறது.
வடகொரியாவுடன் நல்லுறவு கொண்ட நாடுகள்
164 உலக நாடுகள் நல்லுறவு கொண்ட போதிலும், வெறும் 24 நாடுகளின் தூதரகங்கள் தான் அங்கு உள்ளன. 47 நாடுகளில் தனது தூதர்கள் இருந்தாலும் அவற்றுடன் நல்லுறவு பேணுகிறது எனக் கூறமுடியாது. சீனா மட்டுமே அதன் நெருங்கிய நட்புநாடு.
இந்த ஆட்சியை மக்கள் நம்புகிறார்களா?
20-50 சதவீத மக்கள் மட்டுமே இந்த ஆட்சியை நம்புவதாக அங்கிருந்து வெளியேறியவர்கள் கூறுகிறார்கள். மக்களும் கருப்புசந்தை ஊடகம் வாயிலாக வெளியுலகில் நடக்கும் போர்ப்பிரகடனங்களை முதல் அனைத்தையும் அறிகிறார்கள்.
தென்கொரியா இணைய விரும்புகிறதா?
அலுவல் ரீதியாக ஆம் என்றாலும், அதற்குக் கொடுக்கும் விலை அதிகம் என அறிந்தே வைத்துள்ளது தென்கொரியா. CNNன் ஃபரித் ஜகாரியா கூறுகையில், கிழக்கு மேற்கு ஜெர்மனி ஒன்றிணைந்ததைச் சுட்டி காட்டி, கிழக்கு ஜெர்மனி தனது GDPல் 5% தொகையை ஒன்றிணையச் செலவு செய்ததாகச் சொல்கிறார்.
தென்கொரியா இதைச் செய்ய முன்வருமா?