ஒரு காலத்தில் தமிழகத்தின் தலை சிறந்த நெட்வொர்க்காக இருந்த ஏர்செல் இன்று திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தினால் தங்களது வாடிக்கையாளர்களுக்குச் சரியான சேவையினை வழங்காததால் வாடிக்கையாளர்கள் தங்கலது மொபைல் எண்ணைப் பிற நெட்வொர்க்குகளுக்கு போர்ட் செய்து வருகின்றனர்.
எனவே பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்த தொகையினை பயன்படுத்தாமல் போர்ட் செய்த விவரங்களை அளிக்குமாறு ஏர்செல் நிறுவனத்திற்கு டிராய் உத்தரவிட்டுள்ளது
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
ஏர்செல் நிறுவனத்தில் டிசம்பர் மாத காலாண்டு வரை 8 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. அதிலும் தமிழ் நாட்டில் இருந்து தான் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனத்திற்கு உள்ளனர்.
90 நாட்களுக்குள் போர்ட் செய்ய அனுமதி
தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் ஏர்செல் நிறுவனத்தின் கடன் பிரச்சனைகளால் பல மாநிலங்களில் தொடர்ந்து சேவை அளிக்க முடியவில்லை என்றும் எனவே 90 நாட்களுக்குள் வராத ஏர்செல் வாடிக்கையாளர்களையும் பொர்ட் செய்ய அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது.
சேவை நிறுத்தம்
ஜனவர் 31-ம் தேதியோடு குஜராத், ஹரியானா, இமாசல பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரதேசம் மேற்கு ஆகிய இடங்களில் தங்களது சேவையினை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தால் டிராய் இந்த முடிவினை எடுத்துள்ளது.
கடன் பிரச்சனை
ஏர்செல் நிறுவனம் கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வருவதாகவும், இதனால் நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே மேலும் பிற மாநிலங்களிலும் சேவை வழங்க முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
போட்டி நிறுவனங்கள்
மலேஷிய நிறுவனமான மாக்சிஸ் கீழ் இயங்கி வரும் ஏர்செல் 15,000 கோடி கடன் பிரச்சனையினால் திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் போட்டி நிறுவனங்களான ஐடியா மற்றும் வோடாபோன் உள்ளிட்டவை இண்டர் கனக்டிங் கட்டணத்தினை அளிக்கவில்லை என்று ஏர்செல் அழைப்புகளை ஏற்பதையும் நிறுத்தியுள்ளன.