இந்திய ஐடி நிறுவனங்களையும், ஊழியர்களையும் பயமுறுத்தி வந்த டொனால்டு டிரம்ப் அரசின் புதிய ஹெச்1பி விசா கட்டுப்பாடுகளின் பாதிப்பு எப்படி இருக்கும் எனப் பலரும், பல கருத்துக்களைத் தெவித்துவரும் நிலையில் ஐடி ஊழியர்களுக்குச் சாதகமான ஒரு பதிலை இன்போசிஸ் முன்னாள் உயர் அதிகாரியான மோகன்தாஸ் பாய்க் கூறியுள்ளார்.
இவர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு..
அமெரிக்க அரசு அறிவித்துள்ள புதிய ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகளவிலான பாதிப்பை உருவாக்கும் எனக் கருதப்பட்டு வந்தது. ஆனால் உண்மையில் விதிமுறைகள் சரியாகக் கையாளும் நிறுவனங்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை.
ஆனால் விதிகளை மீறிச் செயல்படும் சில நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பாக அமையும் எனக் கோகன்தாஸ் பாய்த் தெரிவித்துள்ளார்.
இப்படிப் புதிய விதிமுறைகளில் என்ன உள்ளது..?
புதிய விதிமுறை
தற்போது அமெரிக்க அரசு திருத்தி அறிவிக்கப்பட்டுள்ள ஹெச்1பி விசா பெறுவதற்கான புதிய விதிமுறையில், 3ஆம் தரப்பு நிறுவனங்களில் வேலை செய்வதற்காகச் செல்லும் ஒரு ஹெச்1பி விசா ஊழியர் ஒரு சிறப்புப் பணியைத் தனிப்பட்ட திறன் கொண்ட அந்த ஊழியரால் செய்ய முடியும் என்பதை விசாவிற்காக விண்ணப்பிக்கும் நிறுவனம் உறுதிப்படுத்த வேண்டும்.
கால அளவீடு
புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள 7பக்க ஹெச்1பி விசா விதிமுறையில், ஹெச்1பி விசா பெறும் ஊழியர், தான் வேலை செய்யச் செல்லும் 3ஆம் தரப்பு நிறுவனத்தில் பணிபுரியும் காலத்திற்கு மட்டுமே விசா வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஒப்புதல்
ஹெச்1பி விசாவிற்காக விண்ணப்பிக்கும் ஊழியருக்கு, அமெரிக்காவில் இருக்கும் 3ஆம் தரப்பு நிறுவனத்தில் பணிபுரிய ஒப்புதல் முன்கூடியே அளிக்கப்பட வேண்டும். இதுமட்டும் அல்லாமல் விண்ணப்பதாரர் தான் 3ஆம் தரப்பு நிறுவனத்தில் குறிப்பிட்ட பணியைச் செய்து கொண்டு இருப்பதற்கான ஆதாரங்களையும் அளிக்க வேண்டும்.
உறவு
விசா வழங்கப்படும் காலத்திற்கு ஹெச்1பி விசா ஊழியருக்கும், 3ஆம் தரப்பு நிறுவனத்திற்கும் இடையில் நேரடியாக ஊழியர் மற்றும் நிறுவனர் என்ற உறவு இருக்க வேண்டும்.
பெரிய நிறுவனங்கள்
இத்தகைய கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் இந்த விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றியே ஆக வேண்டும் இல்லையெனில் பிரச்சனை பெரிதாக வெடிக்கும்.
இப்படி விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றும் போது எவ்விதமான பிரச்சனைகளும் இருக்காது. ஆனால் சில நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி ஊழியர்கள் பணியில் அமர்த்துகிறது. இத்தகைய நிறுவனங்களுக்குக் கண்டிப்பாகப் பாதிப்பு ஏற்படும்.
பாதிப்பு இல்லை..
இப்புதிய நடைமுறை ஏற்கனவே இந்திய நிறுவனங்களால் பின்பற்ற துவங்கியுள்ள நிலையில் சந்தையில் பெரிய பாதிப்பு இருப்பதாக இல்லை என மோகன்தாஸ் பாய்த் தெரிவித்துள்ளார்.
நடைமுறை
2019ஆம் நிதியாண்டுக்கான ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் அக்டோபர் 1, 2018ஆம் தேதி துவங்கும். இக்காலகட்டத்திலேயே இப்புதிய ஹெச்1பி விசா விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.
தற்காலிக விசா
அமெரிக்காவில் திறன் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இப்புதிய ஹெச்1பி விசா முறைகளில் தற்காலிக ஹெச்1பி விசா வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனைக் கொண்டு அமெரிக்க நிறுவனம் உலக நாடுகளில் திறன் வாய்ந்த ஊழியர்களைத் தேர்வு செய்யலாம்.
ஐடித்துறை
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையைச் சார்ந்த நிறுவனங்கள் தான் அதிகளவிலான ஹெச்1பி விசாவை பயன்படுத்தி வருகிறது.