பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கான அகவிலைப்படியினை 2 சதவீதம் வரை உயர்த்த புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் 5 சதவீதமாக இருந்த அகவிலைப் படியானது 7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
7வது சம்பள கமிஷன்
7வது சம்பள கமிஷன் பரிந்துரைத்துள்ள சூத்திரத்தின் கீழ் மத்திய அரசு 2 சதவீத அகவிலைப் படியினை அளிக்க உள்ளது. இதனால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதார்கள் பயன்பெறுவார்கள்.
எப்போது முதல்
அகவிலைப்படி உயர்வினை 2018 ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு அளிக்கப்படும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதற்காக அகவிலைப் படி வழங்கப்படுகிறது?
அகவிலைப் படியானது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள் பணவீக்கத்தினைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்படுவதாகும்.
கூடுதல் செலவு
இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 13,168.4 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படை சம்பளம்
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக 18,000 ரூபாயாக உள்ள அடிப்படை ஊதியத்தினை 26,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில் 21,000 ரூபாயாக விரைவில் உயர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.