பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மோசடிகள் பூதாகரமாக வெளிவர ஆரம்பித்த பின்னர்த் தான், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க, மத்திய அரசு ' தேசிய நிதி அறிக்கை ஆணையம்' (National Financial Reporting Authority - NFRA) அமைக்க மார்ச் 1 அன்று ஒப்புதல் தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 132 ன் கீழ் அமைக்கப்படும் இந்த ஆணையம், கணக்கு தணிக்கையாளர்களின் பணிகளை மேற்பார்வையிடல் மற்றும் தணிக்கை செய்யும் பணியைச் செய்யும்.
கம்பெனிகள் சட்டம் 2013 சொல்வது என்னவென்றால், " தேசிய நிதி அறிக்கை ஆணையம் இது போன்ற தவறுகளின் மீதான விசாரணையைத் துவங்கிவிட்டால், வேறு எந்த அமைப்போ, ஆணையமோ அதே தவறுக்கான விசாரணையைத் துவங்கவோ, தொடரவோ கூடாது"
தேசிய நிதி அறிக்கை ஆணையச் சட்டம்
இந்த ஆணையம் எவ்வாறு அமைக்கப்பட்டுச் செயல்பாட்டுக்கு வரும் என்பதைப் பற்றி நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது, "ஆணையத்தில் தலைவரும், தேவையான அளவு உறுப்பினர்களும் இருப்பார்கள். வங்கிகளில் நடைபெறும் தவறுகளை விசாரிக்க, இந்த ஆணையத்தை அனுமதிப்பதற்காக ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள விதிகள் விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.
ஆணையத்தில் தலைவர், செயலாளர் மற்றும் 3 நிரந்தர உறுப்பினர்கள் இருப்பர். நாடாளுமன்றத்தில், தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் மசோதா 2017 நிறைவேற்றப்பட்டவுடன், இந்த ஆணையத்தை நிறுவுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்
தன்னிச்சையான அமைப்பான இது, பெரும் ஊழல்களை வெளிக்கொணராத கணக்குத் தணிக்கையாளர்களை ஒழுங்குபடுத்தும் பணியைச் செய்யும்.
1) தணிக்கை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய தணிக்கை தரம்/விதிகளை அரசுக்கு, ஆணையம் தெரிவிக்கும்.
2) அந்த விதிகள் மற்றும் தரங்களை நடைமுறைப்படுத்தி, நிறுவனங்கள் மற்றும் தணிக்கையாளர்களைப் பின்பற்ற வைக்கும்.
3) நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளில், தணிக்கையாளர்களின் சேவை தரத்தை மதிப்பிடும் மற்றும் அதில் அவர்கள் உடன்படுகிறார்களா எனக் கேட்டறியும்.
4) கணக்கு தணிக்கையாளர்கள் ஏதேனும் தவறு செய்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அல்லது அவர்களின் உரிமையை ரத்து செய்யவும் அல்லது 10 ஆண்டுகளுக்குத் தடை செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது.
5) சிவில் நீதிமன்றங்கள் பெற்றுள்ள அனைத்து அதிகாரங்களும், ஒழுங்குமுறை ஆணையமும் பெற்றுள்ளது.
6) ஆணையம் சம்மன் அனுப்பவும், அவர்களின் உறுதிமொழி மீதான ஆய்வுகள் செய்யவும் முடியும்.
7) எந்தவொரு நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்கள், ஆவணங்கள், பதிவேடுகளையும் ஆய்வு செய்யலாம்.
அனைத்துப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும், பட்டியலிடப்படாத பொது நிறுவனங்களும் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவை.