இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத சேமிப்புக் கணக்குகளுக்கான அபராதத்தினை ஏப்ரல் 1 முதல் குறைப்பதாகத் தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி கிளைகள் இருக்கும் பகுதிகளைப் பொருத்து நகரம், புற நகர், மற்றும் கிராமப்புற வங்கி கணக்குகள் எனக் குறைந்தபட்ச இருப்புத் தொகை அளவீடுகளை மாற்றி அமைத்துள்ளதால் ஏப்ரல் 1 முதல் எவ்வளவு அபராதம் என்ற விவரங்களை விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
மெட்ரோ நகரங்கள் மற்றும் புற நகர் பகுதி வங்கி கிளைகள்
மெட்ரோ நகரங்கள் மற்றும் புற நகர் பகுதி எஸ்பிஐ வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் 3,000 ரூபாய்க்கும் குறைவாக இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும்.
சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருந்தால் முன்பு 30 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்தது. அது தற்போது 10 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைக்கப்பட்டுள்ளது. 50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 12 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைக்கப்பட்டுள்ளது. 75 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 50 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணத்தினை 15 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைத்துள்ளனர்.
நகரப் புகுதிகள்
நகரப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை 2,000 ரூபாய் வரை நிர்வகிக்க வேண்டும். இல்லை என்றால் பின் வருமாறு அபராதம் செலுத்த வேண்டும்.
சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருந்தால் முன்பு 20 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்த, தற்போது 7.50 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைக்கப்பட்டுள்ளது. 50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 30 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணத்தினை 10 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைக்கப்பட்டுள்ளது. 75 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணத்தினை 12 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைத்துள்ளனர்.
கிராமப்புற வங்கி கணக்குகள்
எஸ்பிஐ வங்கிகளில் கிராமப்புற வங்கி கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை 1,000 ரூபாய் ஆகும். அதனை நிர்வகிக்கவில்லை என்றால் பின்வருமாறு அபராதம் செலுத்த வேண்டும்.
சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருந்தால் முன்பு 20 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்த, தற்போது 5 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைக்கப்பட்டுள்ளது. 50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 30 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணத்தினை 7.50 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைக்கப்பட்டுள்ளது. 75 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணத்தினை 10 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைத்துள்ளனர்
சேமிப்புக் கணக்குகள்
எஸ்பிஐ வங்கியில் 41 கோடி சேமிப்புக் கணக்குகள் உள்ளன, அதில் 16 கோடிக் கணக்குகள் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா மற்றும் அடிப்படை சேமிப்புக் கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தேவையில்லை. அது மட்டும் இல்லாமல் 21 வயதுக்கும் குறைவாக உள்ள மாணவர்களின் சேமிப்பு கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்க அவசியமில்லை.
மினிமம் பேலன்ஸ் குறைப்பால் யாருக்கு எல்லாம் பயன்?
எஸ்பிஐ வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகை குறைக்கப்பட்டுள்ளதால் 25 கோடிக்கும் அதிகமான சேமிப்பு கணக்கு பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
அடிப்படை சேமிப்பு கணக்கு
சாதாரணச் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் தேவைப்பட்டால் அடிப்படை சேமிப்பு கணக்குகளாகத் தங்களது சேமிப்புக் கணக்கினை மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
பங்குகள்
எஸ்பிஐ பங்குகள் இன்று காலை 11:50 மணி நிலவரத்தின் படி 6.30 புள்ளிகள் என 2.49 சதவீதம் உயர்ந்து 259.15 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.