உச்ச நீதிமன்றம் ஆதார் இணைப்புக் கட்டாயம் என்பதற்கான காலக்கெடு எதனையும் தற்போது தெரிவிக்கவில்லை. எனவே பழைய இன்சூரன்ஸ் பாலிகளுக்கு ஆதார் இணைப்பு தற்போதைக்குத் தேவையில்லை என்று ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.
அதே நேரம் புதிதாக வாங்கப்படும் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு அதார் எண்ணைக் கட்டாயம் அளிக்க வேண்டும்.
ஐஆர்டிஏஐ
இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் புதிதாக இன்சூரன்ஸ் பாலிசி வாங்குபவர்கள் 6 மாதங்களுக்கு ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பழைய பாலிசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அடுத்தத் தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் இணைப்பு தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
பழைய அறிவிப்பு
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டு இருந்த அறிவிப்பில் அனைத்து பொது, சுகாதார மற்றும் லைப் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு அதார் எண் மற்றும் பான் கட்டாயம் என்றும் அது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்து இருந்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் மார்ச் 13-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் வங்கி கணக்கு, மொபைல் எண் மற்றும் பிற சேவைகளுக்கு ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடுவை காலவரையின்றி நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. எனினும் அரசு பொது நல திட்டங்களைப் பெற வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம் ஆகும்.
ஏன் காலக்கெடு நீட்டிப்பு?
ஆதார் இணைப்பு மூலமாகத் தனிநபரின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது மற்றும் தகவல் திருட்டு போன்றவை நடைபெற்று வருகிறது போன்ற புகார்கள் அதிகளவில் எழுந்து வரும் நிலையில் மத்திய அரசின் ஆலோசனைப் படி இணைப்பிற்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது. இருப்பினும் இந்த வழக்குகள் முடிந்து தீர்ப்பு வழங்கும் போது ஆதார் இணைப்புக் கட்டாயம் என்ற உத்தரவு வர வாய்ப்புகள் உள்ளது.