இந்திய வங்கி துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி குறித்துத் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த மோசடி வழக்கின் முக்கியக் குற்றவாளியான நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோரை இந்தியாவிற்கு அழைத்த போது தாங்கள் பிசியாக இருக்கும் காரணத்தால் வர முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த மோசடிக்குத் தொடர்புடைய வங்கி அதிகாரிகள் மற்றும் நிறுவன தலைவர்கள் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சில தகவல்கள் கிடைத்துள்ளது.
பிஎன்பி வங்கி விசாரணை
இந்த வங்கியில் பணியாற்றும் பல அதிகாரிகள் வெளிநாட்டில் சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் வங்கி கணக்குகள் வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரிகள் தற்போது நடந்துள்ள நீரவ் மோடி மோசடியில் ஈடுப்பட்டு இருக்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட விசாரணை
இந்நிலையில் சந்தேகப்படும் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தனிப்பட்ட முறையிலும் கோணத்திலும் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிடுங்கப்படும்
இந்த விசாரணையில் பணம் முறைகேடான முறையில் வெளிநாடு கணக்குகளும், சொத்து வாங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதை நிருபணம் செய்யப்பட்டால் பணத்தையும், சொத்துக்களையும் முடக்கி பிஎன்பி வங்கி கையகப்படுத்தும்.
முதற்கட்ட விசாரணை
தற்போது சில வங்கி அதிகாரிகளின் பெயர் மட்டுமே வெளி வந்துள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணை பலரின் பெயர் தெரியவரும் என விசாரணைக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11 வங்கி அதிகாரிகள்
முதற்கட்ட விசாரணையில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி செய்த மோசடி வழக்கில் சுமார் 11 பேர் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் பிஎன்பி வங்கி அதிகாரிகள்.
மேலும் இதில் மோடியின் பையர்ஸ்டார் இண்டர்நேஷனல் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் ஆகிய நிறுவன அதிகாரிகளும் அடக்கம்.
சிக்கல்
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு இந்தியாவில் மட்டுமே விசாரணை செய்ய அனுமதி உண்டு, வெளிநாட்டில் பெரிய அளவிலான உரிமைகள் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் வங்கி அதிகாரிகளின் வெளிநாட்டுச் சொத்து மற்றும் வங்கி கணக்குகளை எப்படி ஆய்வு செய்யப்போகிறது என்பதே தற்போதைய கேள்வி.
மோசடி தொகை
நீரவ் மோடி மோசடி வழக்கைத் தணிக்கச் செய்யக் கணக்கியல் நிறுவனமான BDO இந்தியா என்னும் நிறுவனத்தை நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின் படி நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோர் பிஎன்பி வங்கியில் செய்யப்பட்ட மோசடி தொகை மட்டும் 13,600 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளது.