உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிக்காக உயர்மட்ட நிர்வாகத்தை மறுசீரமைப்புச் செய்து வருகிறது.
பொதுவாக உயர்மட்ட மறுசீரமைப்பு என்றால் அதிகாரிகளின் துறை மற்றும் பதவிகள் மட்டுமே மாற்றப்படும், ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயர்மட்ட அதிகாரி ஒருவரைப் பணியில் இருந்து வெளியேற்றியுள்ளது.
மைக்ரோசாப்ட்
சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது அமேசானுக்குப் போட்டியாகக் கிளவுட் சேவை மற்றும் அதன் வர்த்தக வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதன் காரணமாகவே உயர் மட்ட நிர்வாகத்தில் மறுசீரமைப்புக்கான தேவை ஏற்பட்டது.
விண்டோஸ்
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவாகக் கருதப்படும் விண்டோஸ் மற்றும் டிவைஸ் வர்த்தகப் பிரிவின் துணைத் தலைவராக இருக்கும் டெரி மையர்சன் தற்போது நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
20 வருடங்கள்
டெரி மையர்சன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 20 வருடமாகப் பணியாற்றி வருகிறார், 2013ஆம் ஆண்டுக்குப் பின் நிறுவனத்தில் நடந்த பல மறுசீரமைர்பு பணிகளால் இவரது பணி சுமை பல மடங்கு அதிகரித்தது.
முக்கியப் பொறுப்பு
இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ், எக்ஸ்பாக்ஸ், ஹோலோ லென்ஸ் மற்றும் சேவை பிரிவில் விண்டோஸ் மற்றும் ஆபிஸ் ஆகியவற்றின் வர்த்தகத்தைக் கவனித்து வருகிறார்.
பொறியாளர்கள்
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் மற்றும் வன்பொருள் பயன்பாட்டைக் குறித்து ஆய்வு செய்ய அதிகளவிலான பொறியாளர்கள் ஒன்று சேர்க்கப்பட்டனர்.
தற்போது இந்தக் குழு இரண்டாகப் பிரிந்து பணியாற்ற உள்ளது.
2 குழு
இதில் ஒரு குழு வாடிக்கையாளர் எப்படித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள் என ஆய்வு செய்யவும், மற்றொரு குழு கிளவுட் கம்பியூடிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி எப்படியெல்லாம் வர்த்தகம் இயங்க வேண்டும் என்பதையும் ஆய்வு செய்யும் என மைக்ரோசாப்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராஜேஷ் ஜா
இந்நிலையில் ராஜேஷ் ஜா பதவி உயர்வு பெற்று மைக்ரோசாப்ட் டிவைஸ்களில் வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்தும் பணிக்குத் தலைமை வகிக்கிறார்.