இன்றைய வேகமான உலகில் கார் அல்லது ஆட்டோ பிடித்துப் பயணம் செய்வது மிகப் பெரிய ரிஸ்க் உடையது ஆகும். சில நேரங்களில் உங்கள் பொருட்களை இலக்க நேரிடும் அல்லது டிராப்பிக் ஜாமில் மாட்டிக்கொண்டு நீங்கள் திட்டமிட்ட ரயில், விமானங்கள் போன்றவற்றில் செல்ல முடியாமலும் போகும்.
இதனைத் தடுக்க ஓலா நிறுவன ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தினால் 5 லட்சம் வரை காப்பீடு அளிக்கும் பாலிசி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் விபத்து, இறப்பு, லேப்டாப் போன்றவற்றை இழந்தது, புக் செய்த விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் போவது, விபத்து நடந்தால் மருத்துவச் செலவிற்கு, ஆம்புலன்ஸ் கட்டணம் போன்றவை வரும்.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
ஏக்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் ஐசிஐசிஐ லாம்பார்டு இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து 110 நகரங்களில் கார் மற்றும் ஆட்டோ பயணிகளுக்கு 1 ரூபாய் பிரீமியம் தொகையில் 5 லட்சம் காப்பீடு அளிக்க ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ரூ. 5 லட்சம் எப்போது கிடைக்கும்?
விபத்து நேரும் போது இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கி இருந்தால் இறந்தாலோ, உடல் உறுப்பு முழுமையாகவோ அல்லது ஒரு பகுதி இழக்க நேர்ந்தால் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டை பெற முடியும்.
ரூ. 1 லட்சம் காப்பீடு
வாகன விபத்து நேர்ந்து மருத்துவச் செலவிற்கு 1 லட்சம் ரூபாய் வரை பணம் கார் மற்றும் ஆட்டோ பயணிகள் என இருவருக்கும் அளிக்கப்படும்.
தினசரி உதவித்தொகை
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது தினசரி உதவித்தொகை 500 ரூபாய் அளிக்கப்படும். ஓபிடி சிகிச்சைக்கு 3,000 ரூபாய் வரை அளிக்கப்படும்.
ஆம்புலன்ஸ்
மருத்துவமனை சிகிச்சைக்கு ஆம்புலென்ஸ் உதவி தேவைப்படும் போது அதற்கான கட்டணமாக 10,000 ரூபாய் வரை காப்பீட்டின் கீழ் அளிக்கப்படும்.
லேப்டாப்
ஓலா கார் அல்லது ஆட்டோ புக் செய்து பயணம் செய்து லேப்டாப் போன்றவை களவு போனால் 1 ரூபாய் இன்சூரன்ஸ் கீழ் 20,000 ரூபாய் வரை காப்பீடு பெற முடியும்.
எப்படி ஓலாவில் இன்சூரன்ஸ் நன்மைகளைப் பெறுவது?
ஓலா செயலியின் கணக்கில் கார் அல்லது ஆட்டோ புக் செய்யும் போது "Profile -- ride insurance -- switch on insurance" என்ற படியை வெற்றிகரமாகத் தேர்வு செய்தால் காப்பீட்டை பெறலாம். தேவையில்லை என்றால் மீண்டும் காப்பீட்டு தேவை நீக்கவும் செய்யலாம்.