இந்திய விமானங்களில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு இணையதளச் சேவை அளிப்பது குறித்து நீண்ட காலமாக விவாதித்து வரும் நிலையில் விரைவில் வைஃபை சேவை அளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
தொலைத்தொடர்பு துறை ஆணையமான டிராய் நீண்ட காலமாக எதிர்பார்ப்பில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கான வைஃபை இணையதளச் சேவை திட்டத்திற்கு வருகின்ற மே 1-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் அனுமதி அளிக்க உள்ளது என்று வியாழக்கிழமை வெளியான நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.
டிராய்
விமானங்களில் வைஃபை இணையதளச் சேவை அளிக்க டிராய் ஒப்புதல் அளித்த உடன் விமான நிறுவனங்களால் பயணிகளுக்குத் தரவு சேவையினை அளிக்க முடியும். ஆனால் கட்டணம் எவ்வளவு என்பதை விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கான உரிமத்தினைக் குறிப்பிட்ட இணையதளச் சேவை வழங்கும் நிறுவனத்திற்கு மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விமானப் பயணிகள்
இந்திய விமானப் பயணிகள் நீண்ட காலமாகவே இணையதளச் சேவை வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில், வைஃபை சேவை அறிமுகம் செய்யும் போது அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் வருவாய்
வைஃபை இணையதளச் சேவையினை விமானத்தில் வழங்குவது என்பது விமான நிறுவனங்களுக்குக் கூடுதல் வருவாயினை அளிக்கும்.
விமான நிறுவனங்கள்
2017-2018 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இண்டிகோ நிறுவனத்தின் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 20.9 சதவீதம் உயர்ந்து 762 கோடி ரூபாயாக உள்ளதாக அறிவித்து இருந்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 2017-ம் ஆண்டு அறிக்கையில் 4.2 சதவீத வருவாய் உயர்வைப் பெற்றுள்ளதாகவும் அறிவித்து இருந்தது.
கட்டுப்பாடுகள்
தொலைத்தொடர்பு ஆணையானது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் நேரங்களில் மட்டுமே பயணிகள் வைஃபை இணையதளச் சேவையினைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான விதிமுறைகள் வகுப்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
உஷார்
அதே நேரம் ஐரோப்பிய நாடுகளில் சில விமானப் பயணங்களின் போது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும் போது விபத்துக்கள் ஏற்படுவதால், லேப்டாப் போன்றவற்றைப் பயன்படுத்த தடை விதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.