தலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளிகள் அவசரச் சட்டம், 2018-ஐ பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்ததைத் தொடர்ந்து, இந்த அவசரச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து இச்சட்டம் அவசரச் சட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2018 ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய நிதித்துறை பரிந்துரைத்தபடி தலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளிகள் அவசரச் சட்டம் 2018-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளிகள் அவசரச் சட்டம் 2018 (அவசரச் சட்டம்), பொருளாதாரக் குற்றவாளிகளின் குற்ற நடவடிக்கைகளையும், அவர்களது சொத்துக்களையும் முடக்கிவைக்கவும் பறிமுதல் செய்யவும் இந்திய அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்க வகை செய்துள்ளது. இதன் மூலம் பொருளாதாரக் குற்றவாளிகள் இந்திய நீதிமன்றங்களின் எல்லைக்கு அப்பால் இருந்துகொண்டு, இந்தியச் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்புவதைத் தடுக்கவும் இந்த அவசரச் சட்டம் வகை செய்கிறது.
இந்த அவசரச் சட்டம் ஒரு நீதிமன்றம் (சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டம் 2002-ன் படி அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம்), ஒரு நபரைத் தலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்க வகை செய்கிறது.
தலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளிகள் அவசரச் சட்டம் 2018 கீழ்க்காணும் அம்சங்களைக் கொண்டதாகும்:
- ஒரு நபர் தலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வது;
- பொருளாதாரக் குற்றவாளியின் சொத்துக்களை முடக்கிவைத்து, அவர் மீது குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்;
- பொருளாதாரக் குற்றவாளி என்று கருதப்படுபவருக்குச் சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புதல்;
- பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல் அல்லது குற்ற நடவடிக்கைகளைத் தொடருதல்;
- தலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளி, சிவில் உரிமைகளைக் கோர உரிமையற்றவராக்குதல்;
- சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கவும், அதனை விற்பனை செய்யவும் நிர்வாகி ஒருவரை நியமித்தல்.