இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமாகத் திகழும் பிளிப்கார்ட் உடன் அமெரிக்காவின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமான வால்மார்ட் 51 சதவீத பங்குகளைக் கைப்பற்றி ஒன்று சேர்வது கிட்டதட்ட உறுதியாகியுள்ள நிலையில், பிளிப்கார்ட்-இன் சக போட்டி நிறுவனமான அமேசானுக்கு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.
வால்மார்ட்-பிளிப்கார்ட் கூட்டணி
பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்துடன் வால்மார்ட் சுமார் 12 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்து 51 சதவீத பங்குகளைக் கைப்பற்ற கடைசிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.
கூகிள்
இந்நிலையில் வால்மார்ட்-பிளிப்கார்ட் பங்கு விற்பனை நடந்த பின்பு கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் இக்கூட்டணி நிறுவனத்தில் 1-2 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை செய்யத் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா
அமேசான் நிறுவனத்தின் ஆதிக்கத்தை அமெரிக்காவில் குறைப்பதற்காக வால்மார்ட், ஆல்பபெட் கூட்டணி சேர்ந்ததைப் போலவே இந்தியாவில் பிளிப்கார்ட் உடன் சேர உள்ளது.
கூகிள் எஸ்க்பிரஸ்
வால்மார்ட் - ஆல்பபெட் கூட்டணி மூலம் ஆன்லைன் ஷாப்பிங் சேவையான கூகிள் எக்ஸ்பிரஸ் தளத்தில் வால்மார்ட் பொருட்களை அமெரிக்கா முழுவதும் கூகிள் விற்பனை செய்தது.
தற்போது செய்யப்பட்ட கூட்டணி மூலம் பிளிப்கார்ட், கூகிள் வாயிலாக வால்மார்ட் தனது பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளது.
இந்தியாவில்
மேலும் பிளிப்கார்ட், வால்மார்ட், ஆல்பபெட் கூட்டணி வாயிலாகக் கூகிள் ஆன்லைன் ஷாப்பிங் துறையில் களமிறங்க உள்ளது.
அமேசான்
இந்த 3 பெரிய நிறுவன கூட்டணியுடன் பேடிஎம், அலிபாபா கூட்டணியும் உள்ளது. இவ்வளவு பெரிய வர்த்தகப் போட்டியை அமேசான் எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதே தற்போதைய கேள்வி.