மனித வாழ்க்கையில் இறப்பும் வரியும் தவிர்க்கமுடியாதது என வேடிக்கையாகச் சொல்வார்கள். அடிப்படை வரி வரம்பான ரூ2,50,000 கீழ் வருமானம் இருந்தால் மட்டுமே முழுமையான வரிவிலக்கு கிடைக்கும்.
இந்த அடிப்படை வரிவிலக்கு வரம்பைத் தவிர, வரி செலுத்துபவர்கள் வேறு சில வருமானத்திற்கும் வரிவிலக்கு பெற முடியும் என்பதை வெகு சிலரே அறிவர். வருமான வரிச்சட்டம் பிரிவு 10 ன் கீழ் சில வகை வருமானத்திற்கு முழு வரிவிலக்கும், சிலவற்றிற்குப் பகுதி வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது.
பகுதியாகவோ அல்லது முழுவதுமாக வரிவிலக்கு பெற வாய்ப்புள்ள 10 வருவாய் இனங்களைப் பற்றியே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
1. பணிக்கொடை
வருமானவரி சட்டத்தின் பிரிவு 10(10) ன் கீழ், மத்திய அரசு, மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், இறப்பின் காரணமாகவோ அல்லது பணிஓய்வின் போதோ பெறும் பணிக்கொடைக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. இதுவே தனியார் துறை பணியாளர்களுக்கு, வருமானவரி சட்டத்தில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் ரூ10லட்சம் வரையிலான பணிக்கொடைக்கு வரிவிலக்கு உண்டு. இதில் ஒரு நல்ல செய்தி என்னவெனில், இந்த வரும்பை ரூ10 லட்சத்தில் இருந்து ரூ20 லட்சமாக உயர்த்த ஏற்கெனவே மக்களவையில் அரசு சட்டம் இயற்றியுள்ளது.
2. விருப்ப ஓய்வின் போது கிடைக்கும் பணம்
வருமானவரி சட்டத்தின் பிரிவு 10(10) ன் கீழ், பணியாளர்கள் விருப்ப ஓய்வு அல்லது பணியை முடிக்கும் போது பெறும் பணத்திற்கு அதிகபட்சமாக ரூ5,00,000 வரை வரிவிலக்குப் பெறலாம். பணி ஓய்வின் போது எவ்வளவு பணம் பெற முடியும் என்பதை வருமானவரி சட்டம்1962ன் பிரிவு 2BA நிர்ணயிக்கிறது.
பணிக்கொடை போல அரசு ஊழியர்களுக்கு வரம்பில்லா வரிவிலக்கு என்று இல்லாமல், அவர்களுக்கும் ரூ5,00,000 மேல் வரிவிதிக்கப்படுகிறது. ஆனால் இந்த வரிவிலக்கை வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே பெறமுடியும். ஏதேனும் ஒரு மதிப்பீட்டு ஆண்டில் வரிவிலக்கு பெற்றால் பின்வரும் எந்த மதிப்பீட்டு ஆண்டுகளிலும் வரிவிலக்கு கோரமுடியாது.
விருப்ப ஓய்வின் போது பெரும் பணத்திற்கு u/s89 ன் கீழும் வரிவிலக்குக் கோரலாம். அதே நேரம் பிரிவு 10(10c) ன் கீழ் கோர முடியாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பிரிவு 10(10C) அல்லது u/s 89 என ஏதேனும் ஒன்றின் மட்டுமே வரிவிலக்குக் கோரமுடியும்.
3. வெளிநாட்டு சேவைக்கான அலவென்ஸ்
வருமானவரி சட்டத்தின் பிரிவு 10(7) ன் கீழ், இந்தியாவில் வசிக்கும் ஒருவர் வெளிநாடுகளுக்குச் சேவை வழங்கி அதன் மூலம் பெறும் வருமானத்திற்கு வரிவிலக்குக் கோரலாம். இந்தப் பிரிவு குறிப்பாக வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய அரசு ஊழியர்கள் பெறும் வருமானத்திற்கு வரிவிலக்கு கோர உதவும்.
4. பங்குகள் மற்றும் பங்குகளுடன் இணைந்த பரஸ்பர நிதிமூலம் கிடைக்கும் ஈவுத்தொகை
வருமானவரி சட்டத்தின் பிரிவு 10(34) ன் கீழ், இந்திய நிறுவனங்களில் உள்ள பங்குகளில் முதலீடு செய்து கிடைக்கும் ஈவுத்தொகை வருவாய்க்கு ரூ10லட்சம் வரை வரிவிலக்குக் கோரலாம். வரிவிலக்கிற்கான காரணம் என்னவென்றால், வருமானவரித்துறை நிறுவனங்களிடம் இருந்து நேரிடையாக வரியைப் பெற்றுக்கொள்கிறது. இதே போல் பரஸ்பர நிதி பங்குகளின் மூலம் கிடைக்கும் ஈவுத்தொகைக்கும் வரிவிலக்குக் கோரலாம்.
5. விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம்
இந்தியப் பொருளாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது. எனவே வருமானவரி சட்டத்தின் பிரிவு 10(1) ன் கீழ், விவசாயத்தில் எந்தவகையில் வருமானம் வந்தாலும் அதற்கு வரிவிலக்கு கிடைக்கும். இதன் நோக்கும் விவசாயத்துறையை ஊக்குவிற்பதே ஆகும். ஆனாலும், விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ5,000 க்கு அதிகமாக இருந்தால், அது மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட்டுத் தனிநபர் வருமானவரி வரம்பிற்குள் கொண்டுவரப்படும்.
விவசாய நிலங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வருமானவரி சட்டத்தின் பிரிவு 2(14) ன் கீழ் வரிவிலக்கு கிடைக்கும். கூடுதலாக , நிலத்தைக் கட்டாயப்படுத்திக் கையகப்படுத்தும் போது வருமானவரி சட்டத்தின் பிரிவு 10(37) ன் கீழ் வரிவிலக்கு அளிக்கப்படும்.
6. விருது பெறுவோரின் ஓய்வூதியம்
வருமானவரி சட்டத்தின் பிரிவு 10(18) ன் கீழ், தனிநபர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெறும் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் வரிவிலக்கிற்கு உட்பட்டது. இது மத்திய/மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பரம்வீர் சக்ரா/மகாவீர் சக்ரா/வீர் சக்ரா போன்ற விருதுபெற்றவர்களுக்குப் பொருந்தும்.
7. கூட்டு நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானம்
வருமானவரி சட்டத்தின் பிரிவு 10(2A) ன் கீழ், நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் இருந்து கூட்டாளிகள் பெறும் தங்களின் பங்கு வருமானத்திற்கு வரிவிலக்குக் கோரலாம். எளிதாகக் கூறவேண்டுமென்றால் கூட்டுநிறுவனத்திலிருந்து நீங்கள் பெறும் லாபத்திற்கு வரி இல்லை.
இந்தக் காரணத்திற்காகவே நிறுவனம் மற்றும் பங்குதாரர் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டு, நிறுவனத்தின் வருமானத்திற்கு வரியும், பங்குதாரரின் வருவாய்க்கு வரிவிலக்கும் வழங்கப்படுகிறது. ஆனாலும் பங்குதாரர்கள் பெறும் வட்டி வருமானம் மற்றும் ஊதியத்திற்கு வரி செலுத்தவேண்டும்.
8. இந்து கூட்டுக் குடும்பத்திடம் இருந்து கிடைக்கும் பணம்
நீங்கள் இந்து கூட்டு குடும்பத்தின் உறுப்பினராக இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் பணத்திற்கு வருமானவரி சட்டத்தின் பிரிவு 10(2) ன் கீழ் வரிவிலக்கு கிடைக்கும். குடும்ப வருமானத்தில் இருந்து கிடைக்கும் பணம் அல்லது குடும்பச் சொத்துகளின் மூலம் பெறும் பணத்திற்கு வரி இல்லை எனக் கூறுகிறது இதன் சட்டபிரிவுகள்.
9. அரசு பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய்
உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்ட அரசு பத்திரங்களை வெளியிடும். வருமானவரி சட்டத்தின் பிரிவு 10(15) ன் கீழ், இந்தப் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரிவிலக்கு உண்டு. வட்டி வருவாயைப் போல இல்லாமல், முதிர்ச்சியடையும் முன்பே பத்திரங்களை விற்றுக் கிடைக்கும் மூலதன வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும்.
10. ஆயுள் காப்பீடு திட்டங்கள் முதிர்ச்சியடையும் போது கிடைக்கும் பணம்
வருமானவரி சட்டத்தின் பிரிவு 10(10D) ல் குறிப்பிட்டுள்ள படி கிடைக்கும் ஆயுள் காப்பீடு திட்டங்களின் வருமானம், வரிவிலக்கிற்கு உட்பட்டது. உறுதியான மூலதன வரம்பிற்கு உட்பட்டு அதற்கு மிகாமல் தவணைகள் செலுத்தப்பட வேண்டும்.
மார்ச் 2012 வரை உள்ள காப்பீடுகளுக்குத் தவணைத்தொகை, மொத்த உறுதியான மூலதனத்தில் 20%க்கு மிகாமலும், ஏப்ரல் 2012க்கு பிறகு உள்ள காப்பீடுகளுக்குத் தவணைத்தொகை, மொத்த உறுதியான மூலதனத்தில் 10%க்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒரு நிதியாண்டில் பெரும் பணம் ரூ1லட்சத்திற்கு அதிகமாகவும், தவணைத்தொகையும் வரம்புமீறியதாகவும் இருந்தால் 1% டி.டி.எஸ் (TDS-Tax Deducted at source) வசூலிக்கப்படும்.