விமானப் போக்குவரத்தினை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் புதன் கிழமை சென்னை, லக்னோ மற்றும் கவுஹாத்தி விமான நிலையங்களை 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல முக்கிய விமான நிலைகளைப் புதுப்பிக்க 21,000 கோடி ரூபாய் வரை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தினை 2,467 கோடி ரூபாய் முதலீட்டில் புதுப்பிக்க மற்றும் புதிய விமான முனையத்தினை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய முனையமானது பசுமை கட்டிட அம்சங்களைக் கொண்டாதாக இருக்கும் என்று டெல்லியில் இருந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
கவுகாத்தி மற்றும் லக்னோ
சென்னை போன்றே கவுகாத்தி மற்றும் லக்னோ விமான நிலையங்களில் புதிய முனையத்தினை அமைக்க 1,383 கோடி ரூபாய் மற்றும் 1,232 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போக்குவரத்து
இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அதனை மேலும் அதிகரிக்கவே இந்த விமான நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஜயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
பிற விமான நிலையங்கள்
தற்போது இந்தியா விமான நிலயங்கள் அதிகாரசபையானது அகர்தலா, பாட்னா, ஸ்ரீநகர், புனே, திருச்சி, விஜயவாடா, போர்ட் பிளேர், ஜெய்ப்பூர், மங்களூர், டெஹ்ராடூன், ஜபல்பூர், கோலாப்பூர், கோவா, ரூப்ஸி, லே, காலிகட் மற்றும் இம்பால் ஆகிய விமான நிலையங்களை மேம்படுத்தி அளவை அதிகரிக்க வர இருக்கும் 4 முதல் 5 ஆண்டுகளில் 20,178 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை வகுத்துள்ளது.
புதிய விமான நிலையங்கள்
பல நகரங்களில் புதிய விமான நிலையங்கள் வர இருக்கின்றன. மத்திய அரசு நவி மும்பை, நொய்டா சரவதேச விமான நிலையம், மோபா (கோவா), புரந்தார் விமான் நிலையம் (புனே), போகாபுரம் விமான நிலையம் (விஷாகபட்டினம்), தோலெரா விமான நிலையம் அகமதாபாத், ஹிர்சார் விமான நிலையம் (ராஜ்கோட்) உள்ளிட்டவற்றிற்கும் புதிதாக விமான நிலையம் கட்ட அனுமதி அளித்துள்ளது.