இந்திய டெலிகாம் துறையில் ஜியோ தனது சேவையைத் துவங்கிய பின்பு ஏற்பட்ட மாற்றங்கள், பாதிப்புகளைப் பற்றி அதிகளவில் விவரிக்கத் தேவையில்லை.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் 2017ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோவின் மலிவான கட்டண சேவையால் 2018ஆம் நிதியாண்டின் நாட்டின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் லாபத்தில் பெரிய அளவிலான சரிவை சந்தித்து மோசமான நிலையை அடைந்துள்ளது.
இந்த நிலை 2019ஆம் நிதியாண்டில் மேலும் மோசமடையும் என்பது ஜியோ தற்போது எடுத்திருக்கும் முடிவால் தெளிவாகியுள்ளது.
ஜியோவின் முடிவு..
ஜியோ துவக்கம் முதலே அதிகளவிலான வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் குறியாக உள்ளது. இதற்காகக் கட்டணத்தையும் தொடர்ந்து குறைத்தும், டேட்டா அளவை அதிகரித்தும் வருகிறது.
இதன் வாயிலாக மார்ச் காலாண்டில் பிற அனைத்து டெலிகாம் நிறுவனங்களைக் காட்டிலும் ஜியோ நிறுவனத்திற்கு அதிக வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.
புதிய முடிவு
இதன் வாயிலாகச் சந்தையில் இருக்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாக ஜியோ தொடர்ந்து விலையைக் குறைக்கவும் மற்றும் டேட்டா அளவையும் அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.
இதன் படி 2019ஆம் நிதியாண்டிலும் எர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை சந்திக்க உள்ளது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மேலும் ஜியோவின் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் குறியாக இருக்கும் காரணத்தால் விலையைக் குறைப்பதில் எவ்விதமான தயக்கமும் ஜியோ காட்டாது என்பதும் தெளிவாகியுள்ளது.
ஜேபி மோர்கன்
ஜியோ தற்போது சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களை விடவும் குறைவான விலையில் சேவையை அளித்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் பணியாற்றி வருகிறது.
இதன் வாயிலாக இந்நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் சராசரி வருமானம் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் போட்டி நிறுவனங்களை விட லாபத்திலும், வர்த்தகத்திலும் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளது.
விலை உயர்வு
மேலும் தற்போது ஜியோ போட்டி நிறுவனங்களுக்கு இணையாகக் கட்டணத்தை உயர்த்தினால் கண்டிப்பாகச் சந்தையில் இருக்கும் தனது வர்த்தகத்தை இழக்கும். இதனால் கட்டணத்தை உயர்த்த திட்டத்தை ஜியோ கண்டிப்பாகக் கையில் எடுக்காது எனப் பங்குச்சந்தை தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலாண்டு முடிவுகள்
ரிலையன்ஸ் ஜியோ 2018ஆம் நிதியாண்டில் 4வது காலாண்டில் லாபம், வருவாய் என அனைத்திலும் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
134 ரூபாய் வருமானம்
மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 134 ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெறுகிறது.
லாபம்
டிசம்பர் காலாண்டை ஒப்பிடும் போது ஜியோவின் லாப அளவுகள் 1.2 சதவீதம் வரையில் உயர்ந்து 510 ரூபாய் அளவில் உள்ளது. அதேபோல் வருவாய் 3.6 சதவீதம் அளவில் உயர்ந்து 8,404 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வாடிக்கையாளர் எண்ணிக்கை
மேலும் மார்ச் 31 முடிவில் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 18.66 கோடியாக உயர்ந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் இதன் அளவு 16.01 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.