ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பால் நாட்டின் பொருளாதாரம், ரூபாய் மதிப்பு உயரும் எனக் கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது.
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரு வருட சரிவிற்கு வீழ்ந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
உலக நாடுகள் மத்தியில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் நாணயத்தின் வாயிலாகவே பிற நாணயம் மதிப்பிடப்படும், அந்த வகையில் தற்போது உலகளவில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுவது அமெரிக்க டாலர் தான்.
இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 67 ரூபாயை தாண்டி 67.13 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஒரு வருட சரிவு
வெள்ளிக்கிழமை நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.86 ரூபாயாக முடிந்த நிலையில், திங்கட்கிழமை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 67.13 ரூபாயாகக் குறைந்துள்ளது.
இன்றைய ஒரு வருட சரிவிற்கு என்ன காரணம்..?
காரணம் #1
ஐரோப்பிய பொருளாதாரம் மந்தமாக இருக்கும் அதேநிலையில் அமெரிக்கப் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது, இதன் வாயிலாக யூரோவிற்கு எதிராக அமெரிக்க டாலர் தற்போது இந்த வருடத்தின் உச்ச அளவை அடைந்துள்ளது.
காரணம் #2
கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் தங்களது வர்த்தகம் மற்றும் நிதி தேவைக்காகச் செயற்கையாக அதன் விலையை அதிகரிக்கும் நோக்கில் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து அதன் விலையை உயர்த்தியுள்ளனர்.
இதன் வாயிலாகத் தற்போது கச்சா எண்ணெய் விலை 3 வருட உயர்வை அடைந்துள்ளது.
காரணம் #3
மேலும் அமெரிக்க ஈரான் நாட்டுடன் 2015ஆம் ஆண்டுச் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும், இதற்கு மே 15ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும். இல்லையெனில் ஈரான் மீது அமெரிக்காவின் வர்த்தகத் தடைகள் மீண்டும் தொடரும் என டிரம்ப் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.
இது கச்சா எண்ணெய் சந்தையில் பெரிய பிரச்சனையாகத் தற்போது வெடித்துள்ளது.
காரணம் #4
மே 17ஆம் தேதி ரிசர்வ் வங்கி 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான சவரன் பத்திரங்களைத் திறந்த சந்தையில் வாங்குவதாக அறிவித்துள்ளது. இது ரூபாய் பணப்புழக்கத்தைப் பாதிக்கும் என்பதால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் சரிவை சந்தித்துள்ளது.
ஆனால் இதன் வாயிலாக ஏற்படும் சரிவு தற்காலிகமானது.
காரணம் #5
கார்நாடக தேர்தல் இந்திய சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது என்பதால், தென் மாநில வர்த்தகத்தில் இதன் மூலம் கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதன் வாயிலாகவும் ரூபாய் மதிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.