இந்திய ஈகாமர்ஸ் சந்தைக்கு வித்திட்ட பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது மொத்தமாக அமெரிக்க ரீடைல் நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்தின் கையில் செல்ல உள்ளது.
இதன் காரணமாகப் பிளிப்கார்ட்-இன் காட்பாதராக இருக்கும் இந்நிறுவன நிறுவனர் சச்சின் பன்சால் தன்னிடம் இருக்கும் பங்குகள் முழுவதையும் விற்பனை செய்து விட்டு முழுவதுமாக வெளியேற முடிவு செய்துள்ளார்.
சச்சின் பன்சால்
பிளிப்கார்ட் நிறுவனத்தைச் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் இணைந்து துவங்கினர், இந்நிறுவனத்தில் நீண்ட காலம் சிஇஓவாக இருந்த சச்சின் பன்சால் நிர்வாகப் பிரச்சனையின் காரணமாகப் பிளிப்கார்ட் குழு நிறுவனங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதாவது பிளிப்கார்ட்-இன் பிளிப்கார்டின் நேரடி நிர்வாகப் பணியில் சச்சின் விலக்கி வைக்கப்பட்டார்.
வால்மார்ட்
இந்நிலையில் வால்மார்ட் இந்நிறுவனத்தின் பங்குகளை அதிகளவில் கைப்பற்ற திட்டமிட்டு சுமார் 15 பில்லியன் டாலர் வரையிலான தொகையை முதலீடு செய்யத் தயாராகியுள்ளது.
பங்கு விற்பனை
இத்தகைய சூழ்நிலையில் சச்சின் பன்சால் அவர்களிடம் இருக்கும் 5.5 சதவீத பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்து மொத்தமாக நிர்வாகத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளார் சச்சின்.
சாப்ட்பேங்க்
பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது 20 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், வால்மார்ட் சுமார் 60-70 சதவீத பங்குகளைக் கைப்பற்ற 12-15 பில்லியன் டாலரை முதலீடு செய்ய உள்ளது.
இந்நிலையில் வால்மார்ட் நிறுவனத்திற்கு அடுத்தாக அதிகப் பங்குகளை வைத்திருக்கப்போவது ஜப்பானின் சாப்ட்பேங்க் நிறுவனம் தான். தற்போது சாப்ட்பேங்க் நிறுவனம் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளது.