வாடிக்கையாளர்களுக்குத் தேவையில்லாத வணிக அழைப்புகள் செய்தது மற்றும் தொல்லை தரும் எஸ்எம்எஸ் அனுப்பியது என டெலிகாம் நிறுவனங்கள் மீது 2.81 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் விதித்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
2017-ம் ஆண்டில் மட்டும் சேவை தர விதிமுறைகளின் இணக்கமின்மை மற்றும் சேவை தரத்தின் இணக்க அறிக்கைகளைத் தாமதமாகச் சமர்ப்பித்த காரணங்களுக்காக டெலிகாம் நிறுவனங்கள் மீது 50 உத்தரவுகளை இட்டதாகவும் 4.7 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இவை பெரும்பாலும் 2ஜி, 3ஜி, பிராட்பேண்ட் சேவை மற்றும் அடிப்படை சேவைகளுக்காக என்றும் டிராய் தெரிவித்துள்ளது.
பிராட்பேண்ட் சேவை
பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களுக்கு 2017-ம் ஆண்டு 32 நோட்டிஸ்கள் தரம் குறைவாக இருக்கிறது என்ற காரணங்களுக்காக டெலிகாம் நிறுவனங்களுக்கு அனுப்பியதாகத் தெரிவித்துள்ளது.
2ஜி & 3ஜி
இதே போன்று தரமான சேவை வழங்கவில்லை என்று 2ஜி சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு 33 நோட்டிஸ் மற்றும் 3ஜி சேவை வழங்குநர்களுக்கு 14 நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேவையில்லாத அழைப்புகள்
தேவையில்லாத அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களைத் தொந்தரவு செய்த காரணங்களுக்காக 2017-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் மற்றும் நவம்பர் மாதத்தில் 26 உத்தரவுகள் பிறப்பித்து 281.645 லட்சம் ரூபாய் டெலிகாம் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெலிகாம் நிறுவனங்கள்
இந்தக் காரணங்களைக் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டிஸ் பெரும்பாலும் பார்தி ஏர்டெல், ஐடியா மற்றும் வோடாபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தான் என்றும் தெரியவந்துள்ளது.