ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உதான் திட்டத்துடன் இணைந்து குறிப்பிட்ட வழித்தடங்களில் 967 ரூபாய் முதல் உள்நாட்டு விமானப் பயணம் செய்யலாம் என்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. உதான் திட்டத்தின் கீழ் தங்களது விமானச் சேவையினை இந்தச் சலுகை மூலமாக அளிக்கத் துவங்குவதாகவும் ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
உதான் திட்டத்தின் 325 வழித்தடங்களில் விமான நிறுவனங்களுக்குச் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 4 வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வழித்தடங்கள்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் லக்னோ-அலகாபாத்-பாட்னா வழித்தடத்தில் ஜூன் 14-ம் முதல் உதான் திட்டத்தின் கீழ் வாரத்திற்கு மூன்று முறை விமானப் போக்குவரத்துச் சேவையினை வழங்க உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த விமான நிறுவனமானது புதுத் தில்லி-நாஷிக், நாக்பூர்-அலாகாபாத்-இந்தூர் மற்றும் லக்னோ-பரேலி-தில்லி ஆகிய வழித்தடங்களிலும் உதான் திட்டம் கீழ் விமானச் சேவையினை வழங்கும்.
கட்டணங்கள்
லக்னோ-அலகாபாத்-லக்னோ வழித்தடத்தில் பயணம் செய்ய 967 ரூபாய் விமானக் கட்டணம் ஆகும். இதுவே பாட்னா-அலகாபாத்-பாட்னா வழித்தடத்தில் பயணம் செய்ய 1,216 ரூபாய் கட்டணம் ஆகும்.
பிற வழித்தடங்கள்
ஜூன் 15-ம் தேதி முதல் டெல்லி - நாசிக் வழித்தடத்திலும், ஜூன் 16 முதல் நாக்பூர் - அலகாபாத் வழித்தடத்திலும் ஜெட் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்துச் சேவையினைத் துவங்க உள்ளது.
உதான் திட்டம்
விமானப் பயணங்களை ஊக்குவிக்க மத்திய அரசு உதான் திட்டத்தின் கீழ் மானியம் அளிக்கின்றது. இந்தத் திட்டத்திற்கு நிதி அளிப்பதற்காக உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் மும்பை மற்றும் தில்லி உட்பட முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் விமான நிறுவனங்களிடம் இருந்து ரூ. 5,000 ஒரு பயணத்திற்கு எனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.