இந்திய வங்கி நிறுவனங்கள் வழங்கி வரும் ஜீரோ பேலன்ஸ், ஜீரோ கட்டணங்கள் சேமிப்புக் கணக்குகள் குறித்து ஆர்பிஐ வங்கி ஐபிஎல் போட்டிகளின் போது விளம்பரபடுத்தி வந்தது. எனினும், கோடிக்கணக்கான அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் மற்றும் பிரதான் மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டங்கள் கீழ் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலவச பரிவர்த்தனை வரம்பு
அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் மற்றும் பிரதான் மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டங்கள் கீழ் திறக்கப்பட்டுள்ள சேமிப்புக் கணக்குகளில் மாதம் 4 முறை மட்டுமே இலவசமாக டெபிட் அதாவது பணம் எடுக்கக் கூடிய பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.
கூடுதல் பரிவர்த்தனை
கூடுதல் பரிவர்த்தனை மூலம் பணம் எடுக்கக் கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி இல்லை. எனவே வங்கிகள் இதுபோன்ற சேமிப்புக் கணக்குகளுக்கு மாதத்திற்கு 4 இலவச டெபிட் பரிவர்த்தனைகளுக்குக் கூடுதலாகப் பணம் எடுக்க முடியாத அளவிற்குத் தடைபோட்டுள்ளன.
சாதாரணச் சேமிப்புக் கணக்குகள்
எசிடிஎப்சி மற்றும் சிட்டி வங்கி நிறுவனங்கள் இலவச டெபிட் பரிவர்த்தனை வரம்பு முடிந்த உடன் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் மற்றும் பிரதான் மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டங்கள் கீழ் உள்ள கணக்குகளைச் சாதாரணச் சேமிப்பு கணக்குகளாக மாற்றுகின்றனர். இதனால் சாதாரணச் சேமிப்புக் கணக்குகளுக்கு உள்ள அபராதம் போன்றவற்றைச் செலுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏன் இந்த வரம்பு
அடிப்படை சேமிப்புக் கணக்குகள் என்பது நிதி சேமிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் கொண்டு வரப்பட்டது. அவற்றை அனைத்து வங்கிகளும் வழங்க வேண்டும் என்பதற்காக ஆர்பிஐ அதிகபட்சமாக 4 பரிவர்த்தனைகள் என்ற வரம்பை வைத்துள்ளது.
ஆனால் வங்கிகள் ஏடிஎம் பரிவர்த்தனை, ஆர்டிஜிஎஸ், என்ஈஎப்டி, வங்கியில் பணம் எடுப்பது, இணையதளப் பணப் பரிவர்த்தனை மற்றும் தவணை செலுத்தல் என அனைத்து டெபிட் பரிவர்த்தனைகளுக்கும் சேர்த்த 4 எனப் பரிவர்த்தனை மாதம் என முடிவு செய்துள்ளன.
சிக்கல்
இதனால் அடிப்படை சேமிப்பு கணக்கு அல்லது ஜன் தன் யோஜனா வங்கி கணக்குகளில் இருந்து 4 முறை பணத்தினை 20ம் தேதிக்குள் எடுத்துவிட்டால் பணம் தேவைப்பட்டாலும் அடுத்த மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்ற சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அறிக்கை
அடிப்படை சேமிப்புக் கணக்குக்களில் உள்ள இது போன்ற சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்து வந்த ஆஷிஷ் தாஸ் என்பவர் ஐஐடி மும்பையில் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
வங்கிகள்
பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்டோர் ஒரு மாதத்தில் 4 முறை பணத்தினை எடுத்தால் கூடுதல் பரிவர்த்தனைகளுக்குத் தடை விதிக்கின்றனர். எச்டிஎப்சி மற்றும் சிட்டி வங்கிகள் சாதாரணச் சேமிப்புகளாக மாற்றுகின்றனர்.
ஐசிஐசிஐ வங்கி முதலில் 5வது பரிவர்த்தனை முதல் கட்டண வசூலித்து வந்த நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதன் நிலையில் பணத்தினைத் திருப்பி அளித்தது மட்டும் இல்லாமல் 4 பரிவர்த்தனைகளுக்கும் அதிகமாகவும் இலவசமாக வழங்கி வருகிறது.
கோரிக்கை
பிற வங்கிகளில் நிலை என்னவெனத் தெரியவில்லை என்று ஆஷிஷ் தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்கவே இந்த அடிப்படை சேமிப்புக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. ஆனால் ஆர்பிஐ விதிகள் வங்கிகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. அதில் இருந்து அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு வரம்பற்ற பரிவர்த்தனைகள் செய்ய விலக்கு அளிக்க வெண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தபட்ச இருப்புத் தொகை
ஜன் தன் யோஜனா போன்ற இலவச சேமிப்பு கணக்குகளைப் பராமரிக்க முடியாமல் தான் சாதாரணச் சேமிப்புக் கணக்குகள் மீது குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்காத கணக்குகள் மீது அபராதம் விதிப்பதாக எஸ்பிஐ வங்கி குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு கோடி கணக்கு
வங்கி கணக்குகள் இல்லாத இந்தியர்களிடமும் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், எளியமாக அரசு வழங்கும் மானியங்களை வங்கி கணக்கில் பெறவும், நிதி சேகரிப்பை அதிகரிக்கும் நோக்கத்திடமும் ஜன் தன் யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாகக் கூறப்பட்டது.
திட்டம் ஆரம்பித்த ஒரே நாளில் 1 நபர்கள் இந்தக் கணக்கை திறந்ததாகவும் மத்திய அரசு கொக்கரித்தது.
வங்கி அதிகாரிகள்
ஜன் திட்டம் ஆரம்பிக்கும் முன்பே அனைத்துப் பொதுத் துறை வங்கிகளுக்கும் டார்கெட் அளிக்கப்பட்டு இந்த ஜன் தன் வங்கி கணக்குகளைத் திறக்க வாடிக்கையாளர்கள் விவரங்களைப் பெற்று, துவக்க நாளில் இந்த ஒரு கோடி கணக்குகள் துவங்கப்பட்டது வேறு கதை. ஆனால் இப்போது இந்த இலவச கட்டணமில்லா ஜன் தன் வங்கி கணக்குத் துவங்கியவர்களைப் புலம்ப வைக்கும் அளவிற்கு அதில் சிக்கல்கள் உள்ளன என அறிக்கை ஒன்று ஐஐடி மும்பையில் வெளியிடப்பட்டுள்ளது.