நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மார்ச் காலாண்டில் சிறப்பான விற்பனையைச் சந்தித்த காரணத்திற்காக இந்நிறுவனம் தனது லாப அளவீட்டில் சுமார் 70.33 சதவீத அதிக லாபத்தை அடைந்துள்ளது.
லாபம்
மஹிந்திரா நிறுவனம் கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வெறும் 621.78 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே பெற்ற நிலையில், 2017-18ஆம் நிதியாண்டில் 70.33 சதவீதம் அதிகரித்து 1,059.09 கோடி ரூபாய் என்னும் நிலையை அடைந்துள்ளது.
வருவாய்
இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் வெற்றி தயாரிப்பான ஸ்கார்பியோ மற்றும் XUV500 கார் தற்போது சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வரும் நிலையில், மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை 10.47 சதவீதம் உயர்ந்து 13,307.88 கோடி ரூபாய் அளவிலான வருவாயை அடைந்துள்ளது.
தொடர் வளர்ச்சி
இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பவன் கோங்கா கூறுகையில் மஹிந்திராவின் ஆட்டோமோடிவ் துறை 21 காலாண்டுகளாகவும், டிராக்டர் வர்த்தகம் 31 காலாண்டுகளாகவும் தொடர் வளர்ச்சியில் உள்ளது.
பிரிவு வாரியான வளர்ச்சி
மார்ச் காலாண்டில் ஆட்டோமோடிவ் பிரிவு 2.6 சதவீதமும், விவசாயத் துறை உபகரணங்கள் பிரிவு 33.1 சதவீதமும், ஹாஸ்பிடாலிட்டி மற்றும் நிதி சேவை பிரிவு 30.6 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து மொத்த வருமானத்தின் அளவில் 10.47 சதவீதம் உயர்ந்து 13,307.88 கோடி ரூபாய் என்னும் அளவை அடைந்துள்ளது.
பங்கு மதிப்பு
70 சதவீத லாப உயர்வின் மூலம் மும்பை பங்குச்சந்தையில் மஹிந்திரா மஹிந்திரா நிறுவன பங்குகள் இன்று 3.08 சதவீதம் வரையில் அதிகரித்து 895.60 ரூபாய் என்னும் நிலையை அடைந்துள்ளது.