சென்னை: தமிழ் நாட்டு சட்டமன்ற கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் வரித் துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்புகளைத் தாக்கல் செய்த அமைச்சர் தங்கமணி டாஸ்மாக் வருவாய்க் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2016-2017-ம் ஆண்டினை விட 20172018 நிதி ஆண்டில் டாஸ்மாக் வருவாய் 201 கோடி ரூபாய் சரிந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற கூட்டம்
தமிழகச் சட்டமன்ற கூட்டம் நேற்று முன் தினமும் முதல் துவங்கியுள்ள நிலையில் மதுவிலக்கு மற்றும் கலால் வரித் துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்புகளைத் தாக்கல் செய்த அமைச்சர் தங்கமணி 231 கோடி ரூபாய் டாஸ்மாக் வருவாய்ச் சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி வரி வருவாய்
தமிழ்நாட்டில் 11 இந்திய மற்றும் வெளிநாட்டு மது மான உற்பத்தி நிறுவனங்களும், 7 பீர் உற்பத்தி நிறுவனங்களும் 1 ஒயின் தயாரிப்பு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இங்குத் தயாரிக்கப்படும் பீர்கள் வெளிநாடுகளுக்கு 10,08,625 பீர் பாட்டில்கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் அதன் மூலம் தமிழக அரசுக்கு 161.69 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் கிட்டியுள்ளது.
வருவாய் சரிவு
2016-2017 நிதி ஆண்டில் டாஸ்மாக் மூலம் தமிழ் நாட்டு அரசுக்கு 26,995 கோடியே 25 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாகவும் அதுவே 2017-2018 நிதி ஆண்டில் 26,794 கோடியே 11 லட்சம் ரூபாய் ஆகச் சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலால் வரி
2016-2017 நிதி ஆண்டில் மது விற்பனை கலால் வரியாக 6,248 கோடியே 17 லட்சம் பெற்ற நிலையில் அது 2017-2018 நிதி ஆண்டில் 6,009 கோடியே 25 லட்சம் ரூபாயாகச் சரிந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
திருட்டு
மதுக்கடைகளில் திருட்டு நடைபெறுவதாகத் தொடர்ந்து அரசுக்குப் புகார் வரும் நிலையில் 40 கடைகளில் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதிலும் உள்ள 1250 மது கடைகளில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.