சிறு, குறு நிறுவனங்களுக்குப் பிரத்தியேகமாக நிதியுதவி வழங்கி வரும் கேபிட்டல் பர்ஸ்ட் நிறுவனம் ஐடிஎப்சி நிறுவனத்துடன் இணைக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
என்பிஎப்சி பிரிவில் இருக்கும் கேபிட்டல் பர்ஸ்ட் நிறுவனம், ஐடிஎப்சி வங்கியுடன் இணைவதில் எவ்விதமான தடையுமில்லை என மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி ஜூன் 4ஆம் தேதியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரு நிறுவனங்களின் இணைப்பு குறித்து 2018 ஜனவரி மாதத்தில் அறிவித்த நிலையில் தற்போது இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்நிறுவனங்கள் இணைப்பின் மூலம் சிறு, குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன் மற்றும் அதனைச் சார்ந்த வர்த்தகம், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை எனப் பல வகையில் இரு நிறுவனங்களும் வர்த்தக வளர்ச்சியை அடையும்.
ஐடிஎப்சி மற்றும் கேபிட்டல் பர்ஸ்ட் இணைப்பிற்குப் பின் தனிநிறுவனமாகவே செயல்படும். இந்த நிறுவனத்தில் ஐடிஎப்சி லிமிடெட் 40 சதவீத பங்குகளை வைத்திருக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. தற்போதைய நிலையில் 38 சதவீத பங்குகளை ஐடிஎப்சி வைத்திருக்கும் நிலையில் மீதமுள்ள 2 சதவீத பங்குகளைப் பொதுச் சந்தை வழியாக ஐடிஎப்சி பெற திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இன்றைய வர்த்தக முடிவில் ஐடிஎப்சி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4.54 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 48.35 ரூபாய் விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.