அலுவலக ரீதியான பயணத்தில் இருக்கும் போது உங்கள் நிறுவனத்திடம் இருந்து தினசரிபடியை பெற்றதுண்டா? அந்த பணத்தை திரும்பப் பெறுவதற்காக இரசீது இல்லையென்றால் வரிசெலுத்த தயாராக இருங்கள். இதற்கு என்ன காரணம் என தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளீர்களா? இதோ..
ஆந்திரபிரதேஷ் உயர்நீதிமன்றம்
நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது ஆந்திரபிரதேஷ் உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு. பணியாளர்களுக்கு அவர்களின் பயணங்களின் போது செய்யும் செலவுகளுக்கு வழங்கப்படும் தினசரிபடியின் மொத்த தொகைக்கு தகுந்தவாறு வரியை பிடித்தம் செய்வது நிறுவனத்தின் பொறுப்பு என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பை ஏற்றுக்கொண்ட நிறுவனம்
இந்த தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்றம், சன் அவுட்சோர்சிங் சொலுயூசன்ஸ் பிரைவேட் லிமிடேட் என்னும் நிறுவனம் குறுகிய காலத்திற்கு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தனது ஊழியர்களுக்கு வழங்குப்படும் படிகளுக்கு சரியான ஆவணங்களை சமர்பிக்க முடியாததால் அந்த மொத்த படிக்கும் வரி செலுத்த வேண்டும் என்ற வரிவிதிப்பு ஆணையத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டது.
காரணம்
இதற்கு காரணம் பணியாளர்கள் தாங்கள் செய்த செலவுகளுக்கு சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காதது மற்றும் பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட படித்தொகையில் எவ்வளவு தொகையை செலவழித்தனர் என்ற கணக்கு வழக்கு விவரங்களை முறையாக நிறுவனம் பராமரிக்காதது ஆகும்.
பயண படி
வரிவரிச் சட்டம் 1962 பிரிவு 10(14)(i)ன் படி, பணியாளர்களுக்கு வழங்கப்படும் படி மற்றும் பலன்களில், அலுவலக ரீதியாக மொத்தமாகவோ அல்லது தேவைக்கேற்றவாறோ பயன்படுத்தப்படும் பணத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. நிறுவனங்கள் பிரிவு 10(14)(i)ன் படியும், வரித்துறை முன்னர் வழங்கிய சில தீர்ப்புகளின் அடிப்படையிலும், பணியாளர்களுக்கு வழங்கப்படும் வழங்கப்படும் படித்தொகைக்கு வரிவிலக்கு அளித்து, அதை பிரிவு 10(14)(i) ஒரு பகுதியாகவே கருதி வந்தனர்.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
உயர்நீதிமன்றத்தின் கூற்றுப்படி, நிறுவனங்கள் வழங்கும் மொத்த படித்தொகையையும் அலுவல் ரீதியாக பணியாளர்கள் பயன்படுத்துவதில்லை எனவும், வெளிநாடுகளில் ஏற்படும் அதிக வாழ்வாதார செலவுகளுக்கு ஏதுவாக இதை கூடுதல் நன்மையாகப் பணியாளர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். இந்த படித்தொகையை பணியாளர்கள் அலுவல் ரீதியாக மட்டுமே பயன்படுத்தினார்கள் என்பதை நிரூபிக்க நிறுவனங்களுக்கு அடிப்படை ஆதாரமே இல்லை என்பதால், கூடுதல் பலனாக பணியாளர்களுக்குக் கிடைக்கும் இந்த மொத்த படித்தொகையையும் வரிக்கு உட்பட்டது என பிரிவு 17(2) ன் கீழ் வருமானமாகக் கருதவேண்டும்.
நிறுவனத்தின் பொறுப்பு
பணியாளர்கள் தங்களின் செலவு விவரங்களைத் தாக்கல் செய்யும் போது, அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதற்காக உண்மை இரசீதுகளை சமர்ப்பிக்குமாறு நிறுவனங்கள் கேட்க வேண்டுமா என்பது விவாதத்திற்குரியது மற்றும் இதே விவகாரத்தில் ஏற்கனவே முற்றிலும் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எது எப்படியிருந்தாலும் ,சமீபத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், பணியாளர்கள் அலுவல் ரீதியாக செலவு செய்த பணத்திற்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என்றால் அதற்கு வரிவிதிப்பது நிறுவனத்தின் பொறுப்பு ஆகும். இந்த புதிய விதிமுறையானது பணியாளர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு மட்டுமில்லாமல், அலுவல் ரீதியான உள்நாட்டு பயணங்களுக்கும் பொருந்தும்.
ரசீதுகள்
எனவே இந்த வகையான படித்தொகைகளுக்கு வரிவிலக்கு பெற, அலுவல் ரீதியான பயணங்களை மேற்கொள்ளும் போது பணியாளர்கள் அனைத்தும் இரசீதுகளையும் சேகரித்து, பராமரித்து தங்களின் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். உணவு விடுதிகள் முதல் வாடகை கார்கள் வரை தாங்கள் செய்யும் ஒவ்வொரு செலவிற்கும் இரசீதுகளை சேகரித்து பராமரிப்பது என்பது பணியாளர்களுக்கு பெருஞ்சுமையாகத்தான் இருக்கும். அதுவும் இரசீது தராமல் இருக்கும் பட்சத்தில் திண்டாட்டம் தான். இவ்வாறு இரசீதுகளை பணியாளர்கள் சரியாக சமர்ப்பிக்காத போது, நிறுவனங்கள் அதற்கேற்றவாறு வரிபிடித்தம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் சரியாக வரிபிடித்தம் செய்யாததற்கு நிறுவனம் பொறுப்பேற்ற வேண்டி வரும்.
வருமான துறை
மேலும் 2017-18 ம் நிதியாண்டிற்கான வருமானவரி தாக்கல் படிவத்தில்(ITR-1 sajah), பிரிவு 10(14)(i) ன் கீழ் வரிவிலக்கு பெறக்கூடிய பலன்கள்/படிகளை குறிப்பிடுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளின் வருமானவரி படிவங்களில் இது போன்ற தகவல்கள் ஏதுவும் கேட்கப்படவில்லை. தற்போது இந்த வரிவிலக்குகள் கண்காணிப்பட வேண்டியவை என்ற வருமானவரி ஆணையத்தின் நோக்கத்தையே காட்டுகிறது.