உலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகிள் அமெரிக்காவின் பென்டகன் திட்டமான மேவென் என்னும் செயற்கை நுண்ணறிவு சக்தியில் இயங்கும் ஆயுத தொழில்நுட்பத்தில் பணியாற்றுவதாகத் தகவல்கள் வெளியானது.
இதற்குக் கூகிள் ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது முக்கியமான முடிவை எடுத்துள்ளார் கூகிள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை.
எதிர்ப்பு
உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமாக இருக்கும் கூகிள் அல்லது அதன் ஒப்பந்ததாரர்கள் ஆயுத தொழில்நுட்பத்தில் பணியாற்றுகிறதா? இல்லையா? எங்களுக்கு விளக்கமான பதில் வேண்டும் என இந்நிறுவனத்தின் 4,000 ஊழியர்கள் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
கூகிள் பதில்
இதனைத் தொடர்ந்து, ஊழியர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத கூகிள், அமெரிக்கப் பாதுகாப்பு துறையின் மேவென் என்னும் செயற்கை நுண்ணறிவு ஆயுத தொழில்நுட்பத்தில் பணியாற்றச் செய்யப்பட்ட ஒப்பந்தம் 2019உடன் முடியும் நிலையில், அதன் பின் இத்திட்டத்தில் பணியாற்ற வேண்டாம் எனக் கூகிள் முடிவு செய்துள்ளது.
சுந்தர் பிச்சை
மேலும் சுந்தர் பிச்சை தனது பிளாக்கில், செயற்கை நுண்ணறிவு ஆயுதகளைத் தயாரிப்புக்கான டிசைன் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உருவாக்குவதில் கூகிள் பங்குபெறாது. இதேபோல் இத்தகைய ஆயுதங்கள் மக்களை நேரடியாகப் பாதிக்கும் என்பதில் இதில் ஈடுபட மாட்டோம் எனச் சந்தர் தெரிவித்துள்ளார்.
பிற பணிகள்
அமெரிக்க அரசின் செயற்கை நுண்ணறிவு ஆயுத தயாரிப்புப் பணியில் நாங்கள் ஈடுபடவில்லை எனினும், அரசின் பிற திட்டங்களில் அதாவது சைப்ர் செக்யூரிட்டி, டிரைனிங், ராணுவ ஆட்சேர்ப்பு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் உடல் நலம், தேடல் மற்றும் காப்பாற்றும் பணிகளிலும் திட்டத்திலும் தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் சுந்தர் குறிப்பிட்டுள்ளார்.