மோடி அரசால் அறிவிக்கப்பட்ட அட்டல் பென்ஷன் திட்டத்தில் தற்போது அதிகப்படியாக மாதம் 5000 ரூபாய் அளவிலான ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்பட உள்ளது.
இந்த அளவீட்டை 10,000 ரூபாய் வரையில் உயர்த்த மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
5000 ரூபாய் மட்டுமே
தற்போது இத்திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையிலான ஓய்வூதியம் அளிக்கப்படும் நிலையில், சந்தையில் ஆய்வுகள் மற்றும் மக்களின் கோரிக்கை அடிப்படையில் இத்திட்டத்தை மாதம் 10,000 ரூபாய் வரையில் ஓய்வூதியம் அளிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
60 வயதுக்குப் பின்
இத்திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு 60 வயதாகும் போது அவர்கள் தேர்வு செய்யப்பட்ட பென்ஷன் தொகை அளிக்கப்படும், இந்நிலையில் அடுத்த 20-30 வருடங்களுக்குப் பின் 5000 ரூபாய் என்ற தொகை கண்டிப்பாகப் போதுமானதாக இருக்காது.
இதன் காரணமாகத் தற்போது ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டு மற்றும் வளர்ச்சி அமைப்பு இத்திட்டத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
வயது வரம்பு
மேலும் இத்திட்டத்திற்கான வயது வரம்பு தற்போது 18-40 வருடங்களாக இருக்கும் நிலையில், இந்த அளவீட்டை 18-50 ஆக உயர்த்தவும் இந்த அமைப்பு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதன் மூலம் இத்திட்டத்தில் சேரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே இத்திட்டத்தில் சுமார் 1.02 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.
வளர்ச்சி
2017-18ஆம் நிதியாண்டில் மட்டும் இத்திட்டத்தில் புதிதாக 50 லட்சம் பேர் இணைந்துள்ளனர், நடப்பு நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 60-70 லட்சம் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.