சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும், கர்நாடக மாநில தேர்தலுக்குப் பின்னும் இந்திய எரிபொருள் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதன் எதிரொலியாக மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 14 மாத உயர்வை அடைந்துள்ளது.
14 மாத உயர்வு
நாட்டின் மொத்த விலை பணவீக்கம் ஏப்ரல் 2018இல் 3.18 சதவீதமாகவும், மே 2017இல் 2.26 சதவீதமாக இருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வின் வாயிலாக மே 2018இல் 4.43 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது கடந்த 14 மாதங்களில் எட்டாத உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2017இல் மொத்த விலை பணவீக்கம் 5.11 சதவீதமாக இருந்தது.
உணவு
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் தொடர்ந்து உயர்த்திய காரணத்தால் மே மாதம் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருந்தது. இதன் காரணமாக ஏப்ரல் மாத உணவு பணவீக்கம் 0.87 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதம் 2.26 சதவீதமாக உயர்ந்தது.
காய்கறி விலை
ஏப்ரல் மாதத்தில் -0.89 சதவீதமாக இருந்த காய்கறி பணவீக்கம் மே மாதத்தில் +2.51 சதவீதமாக உயர்ந்து மக்களின் பாதித்தது.
அதேபோல் பழங்களின் பணவீக்கம் 15.40 சதவீதமாகவும், உருளைக் கிழங்கு மீதான பணவீக்கம் 81.93 சதவீதமாகவும், பருப்பு மீதான பணவீக்கம் 21.13 சதவீதம் வரையிலும் உயர்ந்துள்ளது.
மிகப்பெரிய பாதிப்பு
இதோடு எரிபொருள் மற்றும் மின்சாரப் பணவீக்கம் 7.85 சதவீதத்தில் இருந்து 11.22 சதவீதம் வரையில் இந்த மே மாதம் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இந்தியா பலநாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நிலையில், ஏப்ரல் மாதம் 66 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் தற்போது 74 டாலராக உயர்ந்துள்ளது.