இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் தங்களது ஊழியர்களுக்கு வழங்கி வரும் மெடிக்கல் கார்டில் உள்ள சிக்கலை போக்க கிரெடிட் கார்டி போன்று புதிய கார்டினை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தற்போது ரயில்வே நிர்வாகம் அளித்து வரும் மருத்துவ அட்டையானது பழைய ரேஷன் கார்டு புத்தகம் போல உள்ள நிலையில் அதனை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய மருத்துவ அட்டை
புதிய மருத்துவ அட்டையானது தனிப்பட்ட ஊழியர்கள் எண்ணுடன் வழங்கப்படும் என்றும், மேலும் அவரைச் சார்ந்து உள்ளவர்களுக்குத் தனியாக மருத்துவ அட்டைகள் வழங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் கார்டு
ரயில்வே ஊழியர்களுக்கான புதிய மருத்துவ அட்டையானது வங்கி வழங்கும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் போன்றே இருக்கும் என்றும், பிளாஸ்டிக் கார்டாக வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.
கார்டுகள் வகைப் பிரித்தல்
புதிய அட்டையில் ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்து உள்ளவர்கள், ஓய்வுபெற்றவர்கள் என்ற வகையினைப் பிரிக்கக் கலர் பட்டைகள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கார்டினை புதுப்பிக்கும் விதிமுறைகள்
ரயில்வே மருத்துவ அட்டை பயனாளியின் வயது 15-க்கு உட்பட்டு இருக்கும் நிலையில் 5 வருடத்திற்கான புதிய அட்டை வழங்கப்படும் என்றும், அது காலாவதியான பிறகு புதிய கார்டினை பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுவே 15 வயதிற்கு அதிகமாக உள்ள ரயில்வே மருத்துவ அட்டை பயனாளிகளுக்கு 40 வயது வரையில் பயன்படுத்த கூடிய அட்டை வழங்கப்படும் என்றும், பின்னர்ப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும், அதே போன்று ஓய்வு பெறும் போதும் கார்டினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்கள் எண்ணிக்கை
தற்போது இந்தியன் ரயில்வேஸ்-ல் 13 லட்சம் ஊழியர்களும் அவர்களுக்கு இணையான ஓய்வூதியதார்களும் உள்ள நிலையில் ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்து உள்ளவர்களுக்குச் சேர்த்து மருத்துவ அட்டை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மருத்துவக் கார்டு வேண்டாம் என்றால்?
மருத்துவ அட்டை வேண்டாம் என்று கூறும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு மருத்துவ அலவென்ஸ் என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் சேர்த்து அளிக்கப்பட்டு வருகிறது.