மத்திய அரசு 2019-ம் ஆண்டுத் தேர்தல் வருவதால் ஏர் இந்தியா பங்குகளை விற்பதை ஒத்திவைத்துவிட்டு சேவை செயற்பாடுகளுக்குத் தேவையான நிதி அளிக்க முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நட்டம் அளித்து வரும் பொதுத் துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்பதில் தோல்வி அடைந்த 3 வாரங்களுக்குப் பிறகு மத்திய அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.
தினசரி செயல்பாடுகள்
ஏர் இந்தியா நிறுவனம் தங்களது தினசரி செயல்பாடுகளுக்கு நிதி தேவைப்படுகிறது என்று கோரிக்கை வைத்ததுள்ளதை அடுத்து அதனை அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அருண் ஜேட்லி
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான கூட்டம் ஒன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிலையில் அதில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் தற்காலிக நிதி அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயல், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு, போக்குவரத்துத் துறை அமைச்சர் நித்தின் கட்காரி மற்றும் விமானப் போக்குவரத்து துறையின் மூத்த அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.
செயற்பாடுகள் லாபம்
ஏர் இந்தியாவின் செயற்பாடுகள் லாபத்துடன் தான் உள்ளது. எந்த ஒரு விமானமும் காலியாகச் செல்வதில்லை. எனவே செயற்பாடுகளை எப்படி மெருகேற்றுவது என்பதில் கவனம் செலுத்த உள்ளோம். தற்போது அவசரமாக விற்கும் முடிவினை கைவிடுவதாகக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஐபிஓ
விற்பனை செய்யும் முடிவில் இருந்து வெளியேறி முன்பு ஏர் இந்தியாவின் பங்குகளை எப்படிப் பங்கு சந்தையில் ஐபிஓ மூலம் வெளியிட முடிவு செய்யப்பட்டதோ அதனை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். பங்குகளை வெளியிட்டு வரும் நிதியினைப் பயன்படுத்தி ஏர் இந்தியா நிறுவனத்தினை லாபத்துடன் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
செபி
செபியின் விதிகளின் படி ஒரு நிறுவனம் பங்கு சந்தையில் வெளியிடப்பட வேண்டு என்றால் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த நிறுவனம் தொடர்ந்து லாபத்தினைப் பதிவு செய்து இருக்க வேண்டும்.
ஊழியர்கள்
மத்திய அரசு செயல்பாடுகளை மெருகேற்றும் என்று தெரிவித்துள்ள நிலையில் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவலின் படி ஊழியர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தனியார் நிறுவனங்கள் போல மாற்றம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
விற்பனை
ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை வாங்குவது மட்டும் இல்லாமல் 24,000 கோடி ரூபாய் கடன் அல்லது 8,000 கோடி மதிப்பிலான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதால் ஏலத்தில் யாரும் பங்கேற்காமல் விற்பனை தடைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது