சீன அரசு, அமெரிக்காவின் 50 பில்லியன் டாலர் வர்த்தக மதிப்புடைய பொருட்கள் மீது வரியை உயர்த்தத் திட்டமிட்டது, இதனால் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது 10 சதவீத வரியை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இரு நாடுகள் மத்தியில் தணிந்திருந்த வர்த்தகப் போர் பிரச்சனை தற்போது டிரம்பின் அறிவிப்பால் மீண்டும் வெடித்துள்ளது.
அமெரிக்கா - சீனா இடையில் உருவாகியுள்ள இந்த வர்த்தகப் போர் பதற்றத்தின் வாயிலாக ஆசிய சந்தையின் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அதிகளவிலான சரிவை சந்தித்தது. நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் சீனா 3.78% சரிவும், ஹாங்காங் 2.76% சரிவும் சந்தித்து முதலீட்டாளர்களை அதிர வைத்தது.
இதன் அதிர்வுகளின் தாக்கம் மும்பை பங்குச்சந்தையிலும் அதிகளவில் தெரிந்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தையும் நேற்று சரிவுடன் முடிந்தது. இந்நிலையில் அமெரிக்கா சீன வர்த்தகப் போர் பிரச்சனையால் இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் எவ்விதமான பாதிப்புக்கள் ஏற்படும்..?
உற்பத்தி பொருள்
உலகளவில் அதிகளவிலான உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனம் என்றால் சீனா தான். தற்போது சீனா விதித்துள்ள வரியின் மூலம் பேஸ் மெட்டல் பிரிவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் சர்வதேச அளவில் வளர்ச்சி அளவீடுகள் பாதிக்கும்.
பேஸ் மெட்டல் பிரிவில் இருக்கும் இந்திய நிறுவனங்களுக்குச் சீனா-அமெரிக்க வர்த்தகப் போர் பிரச்சனையால் மிகப்பெரிய வருவாய் பாதிப்பு ஏற்படும்.
தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்
இந்தச் சூழ்நிலையில் தங்கம் பாதுகாப்பான இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது, மேலும் கச்சா எண்ணெய் விலை சீனா-அமெரிக்கப் பிரச்சனையால் குறையவும் வாய்ப்பு உள்ளது.
கச்சா எண்ணெய் வர்த்தகம்
சீனா-அமெரிக்க வர்த்தகப் போர் பிரச்சனையில், சீனா தனது கச்சா எண்ணெய் தேவைக்காக அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க நிறுத்திவிட்டு மேற்கு ஆப்பிரிக்கா பகுதியில் இருந்து வாங்கலாம். இதனால் அமெரிக்கக் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் குறையும்.
மேலும் அமெரிக்காவால் சீனாவை போல் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையைப் பிடிக்க முடியாது. இது அமெரிக்காவிற்குப் பின்னடைவாக அமைந்தாலும், இதன் மூலம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும், இது இந்தியாவிற்குச் சாதகம்.
முதலீடு
சீனா-அமெரிக்க வர்த்தகப் போர் பிரச்சனை இருநாடுகளை மட்டும் அல்லாமல் வளரும் நாடுகளையும் சேர்த்து அதிகளவில் பாதிக்கும். இதனால் இந்திய முதலீட்டுச் சந்தை இதன் மூலம் அதிகளவிலான பாதிப்பை சந்திக்கும் எனத் தெரிகிறது.
இந்தியாவிற்கு வாய்ப்பு
சீனா தற்போது அமெரிக்காவிடம் இலக்கும் வர்த்தக வாய்ப்புகளை இந்தியா மூலம் ஈடு செய்ய முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். ஆனால் இந்தியா சீனாவிற்குத் தற்போதைய அளவில் அதிகம் ஏற்றுமதி செய்யும் பொருட்கள் என்றால் டெக்ஸ்டைல், கார்மென்ட்ஸ், ரத்தினங்கள், ஆபரணங்கள் ஆகியவை மட்டுமே.
ஆனாள் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் பொருட்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளின் அளவு மிகவும் அதிகம். இதனால் அமெரிக்காவின் இடத்தை இந்தியாவால் ஈடு செய்யச் சில பிரிவுகளில் மட்டுமே சாத்தியம்.
ரூபாய் மதிப்பு
சீனா-அமெரிக்க வர்த்தகப் போர் பிரச்சனையால் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டு அளவு குறையும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ள நிலையில், ரூபாய் மதிப்பு உயரும். ஆனால் தற்போதைய நிலையில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.06 ரூபாயாக உள்ளது.
வர்த்தகப் போர் பிரச்சனை உச்சம் அடையும் நிலையில் ரூபாய் மதிப்பு 70 ரூபாயைத் தாண்டலாம்.
பொருளாதாரம்
இந்திய பொருளாதார வளர்ச்சியில் 42 சதவீதம் ஏற்றுமதி இறக்குமதியை நம்பிதான் உள்ளது. இதுமட்டும் அல்லாமல் நிதிப்பற்றாக்குறையும் அன்னிய முதலீட்டை நம்பி தான் உள்ளது.
சீனா-அமெரிக்க வர்த்தகப் போர் பிரச்சனையால் இவை இரண்டுமே பாதிக்கப்படும் நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கும்.