நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் நிர்வாகத் தலைவரான சந்திரசேகரன், இக்குழுமத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், இணைப்புகள், நிறுவனத்தை வாங்கும் திட்டம், புதிய வர்த்தக முயற்சி எனப் பல முக்கியத் திட்டங்கள் அடங்கிய 5 ஆண்டுத் திட்டத்தை லண்டனில் நடக்கும் 2 நாள் நிர்வாகக் கூட்டத்தில் அவர் அறிவிக்க உள்ளார்.
முதல் முறை
2017 பிப்ரவரி மாதம் டாடா குழுமத்தின் தலைவராகப் பதவியேற்றிய சந்திரசேகரன் முதல் முறையாக டாடாவின் 5 ஆண்டு விஷன் திட்டத்தை அறிவிக்க உள்ளார்.
டாடா ஸ்டீல்
இக்கூட்டத்தில் தற்போது மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது டாடா ஸ்டீல் கைப்பற்ற போகும் திவாலான புஷன் ஸ்டீல் நிறுவனத்தை எப்படி இணைத்து லாபகரமான நிறுவனமாக மாற்றப்போகிறது என்பது தான்.
புஷன் ஸ்டீல் நிறுவனம் தற்போது திவாலாகி வங்கி கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அதனை எப்படி வெளியில் கொண்டு வருவது என்பதையும் சந்திரசேகரன் இக்கூட்டத்தில் தெளிவுபடுத்த உள்ளார்.
டாடா டெலிசர்வீசஸ்
மேலும் டாடா குழுமத்தின் டெலிகாம் சேவைப் பிரிவான டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இரு நிறுவனங்களுக்கு மத்தியிலான நிதி பங்கீடு மற்றும் வர்த்தகப் பரிமாற்றம் ஆகியவற்றையும், மீதமுள்ள டெலிகாம் வர்த்தகத்தை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்தும் சந்திரசேகரன் விவாதிக்க உள்ளார்.
முதலும் கடைசியும்
5 ஆண்டு விஷன் திட்டத்தை முதல் முறையாகச் சந்திரசேகரன் அறிவிக்கும் நிலையில், டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவில் புதிதாக இணைந்துள்ள ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைவர் ஹரிஷ் மன்வானிக்கும் இது தான் முதல் முறை.
அதேபோல் டாடா டிரஸ்ட் நாமினியாக இருக்கும் விஜய் சிங்-கிற்குப் பங்கேற்கும் கடைசி 5 ஆண்டு விஷன் கூட்டமும் இதுதான்.
சந்திரசேகரன்
கடந்த 1.5 வருடமாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சந்திரசேகரன், இதுவரையில் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்து அதிக நஷ்டத்தை அளிக்கும் வர்த்தகங்களைச் சீர்ப்படுத்தி டாடா குழுமத்தின் நஷ்டம் மற்றும் கடன் அளவைக் குறைத்துள்ளார்.
அடுத்தக் கட்டம்
இந்நிலையில் நாளை சந்திரசேகரன் தாக்கல் செய்ய உள்ள விஷன் திட்டத்தின் மூலம் டாடா குழுமம் மட்டும் அல்ல சந்திரசேகரனும் அடுத்தக் கட்ட வளர்ச்சியை அடைவார் என நம்பப்படுகிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் வாழ்த்துக்கள், சந்திரசேகரன்.