இந்திய இ-காம்ர்ஸ் சந்தையில் கால் பதிக்க முடிவு செய்துள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உள்ளூர் மளிகை கடை மற்றும் பிற ஜெனரல் ஸ்டோர்ஸ்களுக்கான ஒரு செயலியினை அறிமுகம் செய்ய உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்தச் செயலியானது லட்சம் கணக்கான கடைக்காரர்கள் மற்றும் வணிகர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மளிகை கடைக்காரர்கள்
ஜியோ இ-காமர்ஸ் செயலி மூலமாக மளிகை கடைக்காரர்கள் பதிவு செய்து கொண்டு அருகில் உள்ள ரிலையன்ஸ் மொத்த விலை விற்பானைக் கடைகளில் இருந்து பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள மளிகை கடைக்காரர்களைக் கவரும் முடிவில் ரிலையன்ஸ் உள்ளது.
மொத்த விலை கடைகள்
ரிலையன்ஸ் நிறுவத்திடம் தற்போது 7,500 ஸ்டோர்ஸ் மற்றும் 50 சரக்குக் கிடங்குகள் உள்ளன. இவற்றில் ஏற்கனவே அருகில் உள்ள மளிகை கடைக்காரர்கள் மற்றும் பிற கடைக்கார்கள் பொருட்களை வாங்கிச் செல்லும் நிலையில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சேவைகளை இப்போது இந்தச் செயலிகள் மூலம் பெற முடியும்.
இ-காமர்ஸ்
இ-காமர்ஸ் சந்தையில் முறையான லாஜிஎஸ்டிக்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி இல்லை என்றால் சிரமம் என்பதால் அதனை அமைக்கும் பணிகளில் ரிலையன்ஸ் ஈடுபட்டு வருகிறது.
ஜியோ
வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் எந்த ஒரு தளத்தில் இருந்தும் பொருட்களை வாங்கும் சேவையினையும் வழங்க முடிவு செய்துள்ளது. இந்தச் செயலியின் பெயர் ‘பாரத்' என்று வைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
எப்போது அறிமுகம்?
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்தச் செயலியானது 2018-ம் ஆண்டு இறுதிக்குள் சேவைக்கு வரும் என்றும் முதற்கட்டமாக மும்பை மற்றும் அகமதாபாத்தில் சேவை தொடங்கப்படும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
எப்எம்சிஜி நிறுவனங்கள்
எப்எம்சிஜி நிறுவனங்கள் தற்போது டீலர்கள், டிஸ்ட்ரீபியூட்டர்கள் எனத் தங்களது சேவையினை வழங்கி வரும் நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் அந்த முறையினை ஒழிக்க முடிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே தங்களது மொத்த விலை விற்பனை கடைகள் மூலம் டாபர், டாடா பீவரேஜஸ், இந்துஸ்தன் யூனிலீவர் மற்றும் அமுல் உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் பலதரப்பட்ட சலுகைகள் அலீத்து வருகிறது. செயலி மூலம் வரும் போது கூப்பன் ஆஃபர் போன்றவையும் வழங்கப்படும்.
ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் நிறுவனம் மளிகை பொருட்கள், உணவுப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், ஆடை, வீட்டுப் பராமரிப்புப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றை விற்பதன் மூலம் 7.8 சதவீத வருவாயினை 2016-ம் ஆண்டுப் பதிவு செய்துள்ளது. தற்போது அதனை 30 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.