வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎப் கணக்கு வைத்துள்ளவர்கள் ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தால் 75 சதவீத பணத்தினை இடையில் எடுக்க அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.
முன்பு இருந்த விதிப்படி பிஎப் கணக்கு வைத்துள்ளவர்கள் வேலை இல்லாமல் இரண்டு மாதங்கள் இருந்தால் முழுப் பணத்தினையும் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
புதிய விதிகள்
வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பிஎப் சந்தாதார்கள் 30 நாட்கள் வேலை இல்லாமல் இருந்தால் 75 சதவீத பணத்தினைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், மீதம் உள்ள தொகையினை முன்பு இருந்தது போன்றே 2 மாதங்களுக்கு வேலைக் கிடைக்கவில்லை என்றால் எடுத்துக்கொள்ளலாம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மத்திய அமைச்சரான சந்தோஷ் குமார் கங்வார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிஎப் பணத்தினை எடுப்பது குறித்த இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
வேறு எந்த காரணங்களுக்கு எல்லாம் பிஎப் பணத்தை இடையில் எடுக்கலாம்?
வேலை இல்லாமல் இருந்தால் பிஎப் பணத்தினை இடையில் எடுக்கலாம் என்பது மட்டும் இல்லாமல் முதல் முறையாக வீடு வாங்குவது அல்லது கட்டுவது, கடனைத் திருப்பிச் செலுத்துவது, தனக்கு அல்லது உடன் பிறந்தவர்களுக்கு அல்லது தனது பிள்ளைகளுக்குத் திருமணம், குடும்ப உறுப்பினர்கள் மருத்துவச் செலவுகள் போன்ற காரணங்களுக்கு எல்லாம் பிஎப் பணத்தினை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாடுகள்
இடையில் பிஎப் பணத்தினை எடுக்க அனுமதி அளித்தாலும் தேர்ந்தெடுக்கும் காரணங்களைப் பொருத்துப் பிஎப் பண எடுப்பதற்கான சதவீதம் மாறும். தற்போது திருமணத்திற்காகப் பிஎப் பணத்தினை இடையில் எடுத்தால் 50 சதவீதம் மட்டுமே எடுக்க முடியும். இதற்கு ஊழியர்கள் தொடர்ந்து 7 வருடங்களுக்குப் பிஎப் கணக்கினை நிர்வகித்து இருக்க வேண்டும்.
2017-2018 நிதி ஆண்டில் அளிக்கப்பட்ட வட்டி
அன்மையில் தான் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 5 கோடி பிஎப் உறுப்பினர்களுக்கான 2017-2018 நிதி ஆண்டுக்கான 8.55 சதவீத வட்டியினைச் செலுத்தியது. இது கடந்த 5 வருடம் அளித்த வட்டி வருவாயில் மிகக் குறைவாகும்.
முந்தைய ஆண்டுகளில் அளிக்கப்பட்ட வட்டி
வருங்கால வைப்பு நிதி ஆணையம் 2016-2017 நிதி ஆண்டில் 8.65 சதவீதம் வட்டி விகிதமும், 2015-2016 நிதி ஆண்டில் 8.8 சதவீதமும், 2014-2015 மற்றும் 2013-2014 நிதி ஆண்டில் 8.75 வட்டி விகித லாபத்தினையும் பிஎப் சந்தாதார்களுக்கு அளித்தது.