மத்திய அரசு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொது விநியோக பொருட்களைப் பெற வேண்டும் என்றால் ஜூன் 30-ம் தேதிக்கு முன்பு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. தற்போது அதற்கான காலக்கெடுவினை 2018 செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்தக் காலக்கெடு நீட்டிப்பானது அசாம், மேகாலயா, ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களைத் தவிரப் பிற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆதார் இணைப்பு
2017-ம் ஆண்டுப் பிப்ரவரி முதல் அரசு பொது விநியோக கடைகளில் ரேஷன் பொருட்கள் பெற வேண்டும் என்றால் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்த நிலையில் மத்திய அரசு தனிநபர் ஒருவருக்கு 5 கிலோ தானியங்கள் ஒவ்வொரு மாதமும் வழங்குவதை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
நேரடி மானியம்
ரேஷன் கார்டு எனப்படும் குடும்ப அட்டைகளுடன் அனைவரும் ஆதார் எண்ணை இணைத்த பிறகு படிப்படியாக உணவுப் பொருட்கள் வழங்குவது குறைக்கப்பட்டு எல்பிஜி மானியம் போன்று வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டமும் மத்திய அரசுக்கு உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றனர்.
இணைப்பால் அரசுக்கு ஏற்படும் நன்மை
அதே நேரம் ஆதார் எண்ணை ரேஷன் அட்டைகளில் இணைப்பதைக் கட்டாயம் ஆக்குவதால் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் பணம் மிச்சம் அடைந்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.