எச்டிசி நிறுவனம் ஒரு வருடத்திற்கு முன்பு கூகுள் நிறுவனத்திற்கு 1.1 பில்லியன் டாலருக்கு 2,000 பொறியாளர்களை விற்றதை அடுத்துத் தற்போது 1,500 ஊழியர்களை வெளியேற்ற இருப்பதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
எச்டிசி எடுத்துள்ள இந்த முடிவினால் நிறுவனத்தின் 25 சதவீத ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
ஏன் இந்தப் பணி நீக்கம்?
எச்டிசி நிறுவனமானது தைவானில் உள்ள தங்களது உற்பத்தியை மேம்படுத்த முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கையின் முதற்கட்டமாக இந்த ஊழியர்கள் வெளியேற்றம் என்று தகவல்கள் கூறுகின்றன. எச்டிசி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதில் ஏதும் கிடைக்கவில்லை.
எப்போது?
ஊழியர்கள் வெளியேற்றம் ஆனது 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் நடைபெறும் என்று எச்டிசி ஸ்மார்ட்போன் பிரிவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
நட்டம்
எச்டிசி நிறுவனம் முதல் காலாண்டில் நட்டம் அடைந்த நிலையில் இந்த ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையினை அடுத்து இரண்டாம் காலாண்டிலும் வருவாய் இழப்பினை பெறும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே நேரம் 2018-ம் ஆண்டுக்குள் மீண்டு எச்டிசி நிறுவனம் லாபத்துடன் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்திய ஊழியர்கள்
ஊழியர்கள் பணிநீக்கம் ஆனது தைவானில் மட்டும் தான் என்றும் இந்திய அலுவலகங்களில் எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும் தெரியவந்துள்ளது.