ஜூன் மாதத்தில் புதிய வேலைவாய்ப்புகள் அல்லது வேலைக்கு ஆட்சேர்ப்பு அளவு கடந்த வருடத்தை விடவும் சுமார் 9 சதவீதம் அதிகமான உள்ளது என நாக்ரி ஜாப்ஸ்பீக் இன்டெக்ஸ் கூறுகிறது.
ஆட்சேர்ப்பு விகிதம்
2017 ஜூன் மாதத்தில் 1885 புள்ளிகளாக இருந்த ஆட்சேர்ப்பு விகிதம், 2018 ஜூன் மாதத்தில் 2047 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது கிட்டதட்ட 9 சதவீதம் அதிகமாகும்.
முக்கியத் துறை
இக்காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையில் 19 சதவீதமும், ஆட்டோமொபைல் துறையில் 26 சதவீதமும், வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
டெலிகாம்
அதைத் தொடர்ந்து டெலிகாம் சந்தையில் சில மாதங்களுக்கு முன்பு அதிகளவிலான ஊழியர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஆட்சேர்ப்புப் பணியில் முன்னணி நிறுவனங்கள் களமிறங்கியுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 23 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
சென்னை
மேலும் நாட்டின் முக்கிய வேலைவாய்ப்பு நகரங்களிலும் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. டெல்லியில் 8 சதவீதம், சென்னையில் 9 சதவீதம் என உயர்ந்து காணப்படுகிறது.
தொடர் சரிவு
நாக்ரி ஜாப்ஸ்பீக் இன்டெக்ஸ் படி ஏப்ரல் மாதத்தில் 21 சதவீதமாக இருந்த ஆட்சேர்ப்பு (Hiring) விகிதம், மே மாதம் 11 சதவீமாகக் குறைந்துள்ளது, அதேபோல் ஜூன் மாதத்தில் 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. வளர்ச்சி அளவீடுகள் சரிவடைந்தாலும், கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் கணிசமான உயர்வைச் சந்தித்து வருவதால் இது வேலைவாய்ப்பு சந்தைக்கு நம்பிக்கை அளிக்கிறது.
ஐடி துறை
இக்காலகட்டத்தில் ஐடி துறையில் ஆட்சேர்ப்பு விகிதம் 2 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதால், இத்துறை ஊழியர்கள் சோகத்தில் உள்ளனர்.
இத்துறை பாதிப்பிற்குப் பல காரணங்கள் உண்டு, இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்குப் புதிய திட்டங்கள் கிடைக்காமல் இருப்பது, புதிய தொழில்நுட்பத்தில் முழுமையான அனுபவம் இல்லாமல் இருப்பது, அமெரிக்கச் சந்தையில் வர்த்தகப் பாதிப்பு, விசா கட்டுப்பாடுகள் எனப் பல உண்டு.