பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் புதன்கிழமை விங்ஸ் எனப்படும் இந்தியாவின் முதல் இணையதள டெலிபோன் சேவையினை அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்என்எல்-ன் விங்ஸ் செயலி மூலம் எந்த ஒரு மொபைல் எண்ணிற்கும், டெலிபோனிற்கும் கால் செய்து பேச முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
முன்பு இது போன்ற செயலிகளில் அதனைப் பயன்படுத்தும் பிற பயனர்களுடன் மட்டுமே பேச முடியும் அல்லது அந்த நெட்வொர்க் உடன் வைஃபை அல்லது இணையத்தில் இருக்க வேண்டும் என்று இருந்து வந்த நிலையில் செயலியில் இருந்து பிற எந்த ஒரு நெட்வொர்க் போன் மற்றும் டெலிபோன்களையும் தொடர்புகொள்ளலாம் என்றும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
மனோஜ் சின்ஹா
சிம் இல்லாமல் செயலி மூலம் பிற போன்களைத் தொடர்புகொள்ளக் கூடிய பிஎஸ்என்எல்-ன் புதிய சேவையினைத் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா பாராட்டியுள்ளார்.
எப்படிப் பயன்படுத்துவது?
பிஎஸ்என்எல் விங்ஸ் செயலி பயன்படுத்துபவர்கள் எந்த ஒரு நெட்வொர்க் எண்ணையும், பிஎஸ்என்எல், வைஃபை அல்லது பிற நெட்வொர்க்குகளின் இணையதளச் சேவைகளையும் பயன்படுத்தித் தொடர்புகொள்ள முடியும்.
கட்டணங்கள் எப்படி வசூலிக்கப்படும்?
தற்போது பிஎஸ்என்எல் எப்படிச் சிம் கார்டுகள் மூலம் செய்யப்படும் அழைப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கின்றதோ அதே போன்று தான் இந்தச் செய்ய மூலம் செய்யப்படும் அழைப்புகளுக்குக் கட்டணம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
எப்போது முதல் பிஎஸ்என்எல் விங்ஸ் சேவை கிடைக்கும்?
பிஎஸ்என்எல் விங்ஸ் சேவையினைப் பெற இந்த வார இறுதி முதல் பதிவு செய்து ஜூலை 25 முதல் சேவையினைப் பெற முடியும்.
சிம் இல்லா போன்
பிஎஸ்என்எல் எடுத்துள்ள இந்த நடவடிக்கையினால் விரைவில் சிம் இல்லாத மொபைல் போன்களை அதிகம் பார்க்கலாம் என்றும், இரட்டை சிம் கார்டு பயன்படுத்துவது மட்டும் இல்லாமல் கூடுதலாகப் பிஎஸ்என்எல் எண்ணைச் செயலி மூலம் இயக்கி ஒரே நேரத்தில் மூன்று மொபைல் எண்ணை பயன்படுத்த முடியும் என்று வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எதிர்பார்ப்பு
அது மட்டும் இல்லாமல் லேண்ட்லைன் தொலைப்பேசிக்கு அழைப்புகளையும் மொபைல் செயலி கீழ் பெற்று பேச முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.