இந்திய அரசின் திங்க் டாங்க் எனப்படும் நிதி ஆயோக் எல்பிஜி சிலிண்டருக்கான சமையல் எரிவாயுக்கு அளிக்கப்படும் மானியத்திற்கு மாற்று வழி ஒன்றை ஆராய்ந்து வருகிறது.
தற்போது சமையல் எரிவாயு என்பது சிலிண்டர் மட்டும் இல்லாமல் பைப் வழியாகவும் வழங்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இயற்கை எரி பொருள்களையும் சமையல் பயன்பாட்டிற்காக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் தான் இந்த மானியத்திற்கான மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
ஏன் புதிய மாற்று வழி?
எல்பிஜி சமையல் எரிவாயு மானியம் தற்போது வழங்கப்பட்டு வரும் முறையானது சில நகரங்களில் பைப் மூலம் வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயுக்கு ஏற்ற முறையாக இல்லை என்பதற்காகவே இந்தப் புதிய மாற்று வழிக்கான ஆய்வு என நிதி ஆயோக்கின் முதன்மை தலைவரான ராஜ்வ் குமார் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்கள்
நகர்ப்புறங்களில் மட்டும் அதிகளவில் எல்பிஜி பயனர்கள் மானியத்தினைப் பெற்ற்ய் பயன்பெற்று வந்த நிலையில் சுத்தம் மற்றும் குறைந்த விலை போன்ற காரணங்களால் கிராமப்புறங்களுக்கும் எரிவாயு பயன்படுத்துவது மிகப் பெரிய அளவில் பயன் அளிக்கிறது.
தேசிய எரிசக்தி கொள்கை
புதிய மானிய முறை குறித்து தேசிய எரிசக்தி கொள்கை 2030-ல் சென்ற ஆண்டே வரைவறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இந்தப் பரிந்துறைகளானது மத்திய அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
மானியம்
தற்போது ஆண்டுக்கு 14.2 கிலோ எடை கொண்ட 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வீட்டின் பயன்பாட்டிற்காக வழங்கப்படுகிறது. இதற்கான மானிய தொகை நேரடியாக வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டும் வருகிறது.