நிரவ் மோடியின் வங்கி மோசடிக்குப் பிறகு இந்திய அளவில் நகை வணிகம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் வங்கிகளில் நிதி ஆதாரங்களைத் திரட்ட முடியாமல் தொழிலதிபர்கள் விழி பிதுங்கிப் போயிருக்கிறார்கள்.
குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியில் வாங்கிய 11 ஆயிரத்து 400 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டார். இதேபோலச் சென்னையைச் சேர்ந்த நாதள்ளெ சம்பத்து செட்டியின் சிட்பண்ட் மோசடியும் நகைக்கடைகள் மீதான நம்பகத்தன்மையைக் குலைத்துப் போட்டுள்ளது.
நகை வணிகம்
ஒரு நகை கடையைத் தொடங்குவதற்கான மிகப்பெரிய நிதி ஆதாரத்தை வங்கிகளிடம் இருந்தேபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. 75 விழுக்காடு நிதி ஆதாரத்தை வங்கியிலும், 25 விழுக்காடு உள் மூலதனம் மூலதனத்தையும் கொண்டு நகை வணிகம் இயங்கி வருகிறது.
அனைவர் மீதும் சந்தேகம்
இந்த மோசடிகளுக்குப் பிறகு கடன் கேட்டு விண்ணப்பித்தால், ஒவ்வொரு கோப்பையும் ஆராய்வதாகத் தெரிவித்துள்ள நகை வணிகர்கள், எல்லொரையும் சந்தேகிப்பதாகவும் கூறுகின்றனர்.
தவறு
ஒன்றிரண்டு நபர்கள் செய்த தவற்றால் மொத்த ஜூவல்லரி தொழிலும் முற்றிலும் முடங்கிப்போய்விட்டதாகத் தெரிவித்துள்ள ஜூவல்லரி டொமஸ்டிக் கவுன்சிலின் துணைத்தலைவர் அனந்த பத்மநாபன், உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் என 6 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தேவைப்படும் நிதி
நலிவடைந்த இந்தத் தொழில் மீண்டும் சீரடைவதற்கு 10 ஆயிரம் கோடியிலிருந்து 15 ஆயிரம் கோடி வரை தேவைப்படுவதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பாக வர்த்தகத்துறை அமைச்சகத்திடம் முறையிடப் போவதாக அவர்கள் கூறினார்.