நுகர்வோர் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் பதஞ்சலி நிறுவனம் புதிதாக 2 வர்த்தகத் துறையில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி நிறுவனம் பிஸ்கட் முதல் நூடில்ஸ் வரையில் பல துறையில் தயாரிப்பிலும், விற்பனையிலும் உள்ள நிலையில் புதிதாகக் காதி மற்றும் உறைந்த காய்கறிகள் விற்பனையில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.
10,000 கோடி ரூபாய்
பதஞ்சலி நிறுவனம் 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் உறைந்த பட்டாணிகளை ஏற்கனவே சில மாநிலங்களில் விற்பனை செய்யத் துவங்கியுள்ள நிலையில், இப்புதிய முதலீட்டு மூலம் பட்டாணி, கேரட், காலிப்பளவர் ஆகியவற்றை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இத்துறையில் இருக்கும் சிறு நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை சந்திக்க உள்ளது.
விரிவாக்கம்
உறைந்த காய்கறி விற்பனை திட்டத்தை முதற்கட்ட சோதனையில் வெற்றி அடைந்த நிலையில், அடுத்த கட்டமாக 6-7 காய்கறிகளை இதில் சேர்க்க உள்ளது மட்டும் அல்லாமல் தனது விற்பனை தளத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.
10,000 கடைகள்
இதற்காகப் பதஞ்சலி உத்தரகண்ட், சட்டிஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகளை வாங்க முடிவு செய்துள்ளது.
இதோடு 2019ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் சுமார் 10,000 கடைகளைத் திறக்கவும் பதஞ்சலி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
காதி வர்த்தகம்
மேலும் தீபாவளி பண்டிகையின் போது பதஞ்சலி நாடு முழுவதும் சுமார் 100 கடைகளில் தனது காதி பிராண்டை ஆடைகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.