இந்தியாவில் தற்போது மளிகை பொருட்கள் மற்றும் கன்டென்ட் தான் மிகப்பெரிய வர்த்தகமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமேசான் மளிகை பொருட்களை தற்போது தனது பேன்ட்ரி பிரிவின் மூலம் விற்பனை செய்ய துவங்கியுள்ளது.
அதேபோல் அலிபாபா-பேடிஎம் கூட்டணி பிக் பேஸ்கட் நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடு மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்கிறது.
பிளிப்கார்ட் நிறுவனம் சூப்பர்மார்ட் என்னும் தனி வர்த்தக பிரிவின் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்ய துவங்கி ஒரு வருடம் ஆன நிலையிலும் பெரிய அளவிலான வெற்றி அடையவில்லை.
பெங்களூரில் மட்டும் இச்சேவையை அளித்து வரும் பிளிப்கார்ட் விரைவில் டெல்லி, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கும் செல்ல திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் இப்பிரிவு வர்த்தகத்தில் விரைவான வர்த்தகத்தை அடைய வேண்டும் எனத் திட்டமிட்டு இத்துறை வர்த்தகத்தில் பிரத்தியேகமாக இயங்கி வரும் கோபெர்ஸ் நிறுவனத்தை வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது பிளிப்கார்ட்.
ஏற்கனவே பிளிப்கார்ட், வால்மார்ட், ஈபே, மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் தற்போது கோபெர்ஸ் நிறுவனத்தின் மூலம் ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனையில் பெரிய அளவில் இறங்க உள்ளது.
இதுகுறித்து இரு நிறுவனங்களும் எவ்விதமான தகவல்களையும் அளிக்கவில்லை.