வியாழக்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 43 பைசா சரிந்து 69.05 ரூபாய் வரையில் குறைந்து வரலாறு காணாத சரிவைப் பதிவு செய்தது. இதுமட்டும் அல்லாமல் மே 29க்குப் பின் ரூபாய் மதிப்பு அதிகளவில் சரிந்ததும் நேற்றைய வர்த்தகத்தில் தான்.
என்ன காரணம்..?
அமெரிக்க டாலர் மதிப்பின் தொடர் உயர்வுக்கு முக்கியக் காரணம், அந்நாட்டில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதும், ஏற்றுமதியில் சிறந்து விளங்குவதும் தான். இதன் எதிரொலியாக அமெரிக்கப் பத்திர முதலீடு மீதான லாப அளவுகள் 2 வருட உயர்வான 2.624 சதலீத உயர்வை அடைந்துள்ளது.
அன்னிய முதலீடு
இதனால் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் அனைவரும், அமெரிக்கச் சந்தையில் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் இருக்கும் அன்னிய முதலீடு வெளியேறி நாணய மதிப்புக் குறைகிறது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
மேலும் நாடாளுமன்றத்தில் மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தைச் சபாநாயகர் ஏற்றுள்ள நிலையில், தற்போது அரசியலில் நிலையற்ற தன்மை உருவாகியுள்ளதாக முதலீட்டாளர்கள் நினைத்து முதலீட்டைக் குறைத்து வருகின்றனர்.
ஆசிய சந்தை
இது மட்டும் அல்லாமல் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் பிரச்சனையால் ஆசிய சந்தை நாணயங்கள் அனைத்தும் சரிவை சந்தித்துள்ளது.
69.07 ரூபாய்
வியாழக்கிழமை வர்த்தகத்தில் அதிகப்படியாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.07 வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.