இந்திய ரயில்வேஸ் கடந்த சில ஆண்டுகளாகப் பல பிரீமியம் ரயில் சேவைகளைத் துவங்கியுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் சில வழித்தடங்களில் இந்தப் பிரீமியம் ரயில்களில் பயணம் செய்வதை விட விமானப் பயணக் கட்டணம் குறைவாக உள்ளது என்பதே ஆகும்.
17 வழித்தடங்கள்
ரயில்களில் பிளெக்ஸி கட்டணம் முறை அறிமுகம் செய்த பிறகு 120 நாட்களுக்கு முன் ரயில் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்தாலும் 17 வழித்தடங்களில் விமானப் பயணக் கட்டணம் குறைவாக உள்ளதாகச் சிஏஜி அறிக்கை கூறுகிறது.
முக்கிய வழித்தடங்கள்
சென்னை - டெல்லி, ஹைதராபாத்-டெல்லி, பெங்களூரு-டெல்லி, புவனேஷ்வர் டெல்லி, பெங்களூரு-கொல்கத்தா வழித்தடங்களில் முன்பதிவு மூலம் டிக்கெட் புக் செய்வதை விட விமான டிக்கெட் கட்டணம் குறைவாகக் கிடைக்கிறதாம்.
பயணிகள் வரத்து
கடந்த சில ஆண்டுகளக 26 வழித்தடங்களில் விமானப் பயணம் செய்வது அதிகரித்துள்ள நிலையில், பிரீமியம் ரயில் மூலம் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 4 வழித்தடங்களில் மட்டுமே அதிகரித்துள்ளது.
பிளெக்ஸி கட்டணம்
பிளெக்ஸி கட்டணம் சேவையினை ரயில்வே அறிமுகம் செய்த பிறகு துரோந்தோ, சதாப்தி போன்ற அதிவேக பிரீமியம் ரயில்களில் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கை 4.46 சதவீதம் வரை சரிந்துள்ளது. பிளெக்ஸி கட்டணம் முறை அறிமுகம் செய்யும் முன்பு பிரீமியம் ரயில்களில் 2,47,36,469 நபர்கள் பயணம் செய்த நிலையில் தற்போது 2,40,79,899 ஆகச் சரிந்துள்ளது என்று சிஏஜி அறிக்கை கூறுகிறது.