அமெரிக்க ரீடெயில் ஜாம்பவானான வால்மார்ட் இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 30 மொத்த விலை விற்பனை கடைகளைத் திறக்க இருப்பதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அன்மையில் வால்மார்ட் தனது இரண்டாவது கொள்முதல் நிலையத்தினைத் துவங்கிய நிலையில் பி2பி மற்றும் இ-காமர்ஸ் வணிகத்திலும் மிகப் பெரிய திட்டங்களுடன் உள்ளது.
புதிய கடைகள்
2018-ம் ஆண்டு இறுதிக்குள் இரண்டு கடைகளையும், 2019-ம் ஆண்டு 8 கடைகளையும், 2020-ம் ஆண்டு 10 கடைகளையும் வாலாமர்ட் துவங்க உள்ளதாக இந்திய தலைமை நிர்வாக இயக்குநரான கிரிஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் வால்மார்ட் 50 கடைகளைத் திறக்கும் என்றும், உத்திர பிரதேச அரசுடன் இணைந்து 15 கடைகளைத் திறக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கிரிஷ் ஐயர் கூறினார்.
நகரங்கள் தேர்வு
ஏற்கனவே எந்த நகரங்களில் எல்லாம் கடைகளைத் திறக்க வேண்டும் என்று வால்மார்ட் முடிவு செய்துள்ளதாகவும் அவற்றில் சில கான்பூர் மொராதாபாத், வாரணாசி, கோரக்பூர், சஹரன்பூர், லக்னோ மற்றும் கஜியாபாத் ஆகிய இடங்களில் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெஸ்ட் பிரைஸ்
வால்மார்ட் இந்தியாவில் "பெஸ்ட் பிரைஸ்" என்ற பெயரில் 21 கேஷ் & கேரி கடைகளை 9 மாநிலங்களில் இயக்கி வருகிறது. அமெரிக்க வால்மார்ட்டின் துணை நிறுவனமான வாலார்ட் இந்தியா லக்னோவில் இன்று தனது இரண்டாவது கொள்முதல் நிலையத்தினை நிறுவியுள்ளது.
வேலை வாய்ப்பு
வால்மார்ட்டின் இந்த மொத்த கொள்முதல் மையத்தின் மூலம் 1,500 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று ஐயர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்த கொள்முதல் மையம்
சென்ற நவம்பர் மாதம் மும்பையில் முதல் கொள்முதல் மையத்தினைத் துவங்கிய வால்மார்ட் தற்போது இரண்டாவதாக லக்னோவில் துவங்கியுள்ளது. வால்மார்ட் இந்தியாவின் 50 சதவீத வருவாய் தற்போது அதன் ஸ்டோர் இல்லாத ஆன்லைன் சேவை பி2பி வணிகம் மூலமாகப் பெற்று வருகிறது. மிதம் தான நேரடி விற்பனை மூலம் வரும் வருவாய் என்றும் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் மார்க்கெட்
இந்தியாவில் இதே போன்று ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் மார்க்கெட் என்ற பெயரில் நாடு முழுவதும் 43 கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.