இந்தியாவில் ஆன்லைன் டாக்ஸி புக்கிங் சேவையில் இருக்கும் முன்னணி நிறுவனமான ஓலா தற்போது நஷ்டத்தில் இருந்து லாபகரமாக வளர்ந்துள்ள நிலையில், அடுத்த 3 வருடத்தில் பங்குச்சந்தையில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.
பவிஷ் அகர்வால்
ஓலா நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பவிஷ் அகர்வால் 7 வருட ஓலா வர்த்தகத்தைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்குச்சந்தையில் இறங்குவது குறித்துத் தெரிவித்தார்.
உபர்
அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான உபர் நிறுவனத்துடன் போட்டி போட்டு வந்தாலும், ஓலா தற்போது வெளிநாடுகளிலும் தங்களது வர்த்தகத்தைத் துவங்கி உள்ளது. இதனால் அடுத்தச் சில வருடத்தில் ஓலா குறைந்தபட்சம் 10 நாடுகளில் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி வாய்ப்பு
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓலா பங்குச்சந்தையில் இறங்கினால் கண்டிப்பாகப் பெரிய அளவிலான வெற்றியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3-4 வருடம்
கடந்த வருடம் ஓலா நிறுவனம் சுமார் 7 பில்லியன் டாலர் தொகைக்கு மதிப்பிடப்பட்ட நிலையில், அடுத்த 3-4 வருடத்தில் நிச்சயம் பங்குச்சந்தையில் இறங்கத் திட்டமிட்டுள்ளதாக ஓலா நிர்வாகத்தின் சார்பில் பிவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
100 நகரங்கள்
ஓலா நிறுவனத்தின் ஆன்லைன் டாக்ஸி சேவை இந்தியாவில் சுமார் 100 நகரங்கள் மற்றும் டவுன்களில் தற்போது உள்ளது.