தொலைத் தொடர்புத்துறையில் ரிலையன்ஸின் ஜியோ வருகைக்குப் பிறகு குரல் அழைப்புகளுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் 66 விழுக்காடு வரை சரிந்து, 16 காசுகளாகக் குறைந்துள்ளது. இந்தியத் தொலைத் தொடர்புத்துறையில் ஜியோவின் தாக்கம் ஒரு புரட்சியாக வர்ணிக்கப்படுகிறது.
ஜியோ அறிமுகம்
2016 ஆம் ஆண்டுச் செம்டம்பர் மாதம் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ தெலைத் தொடர்புச் சேவையைத் தொடங்கியது. தொடக்க விழாவில் இலவச சேவைகளை வழங்கப்போவதாக அறிவித்த இந்த நிறுவனத்தால், மனம்போன போக்கில் வாடிக்கையாளர்களிடம் கட்டணங்களை வசூலித்து வந்த நிறுவனங்களுக்குப் புளியை கரைக்கத் தொடங்கியது.
குரல் அழைப்புச் சலுகைகள்
2016 செப்டம்பர் மாதம் வரை ஒரு நிமிட குரல் அழைப்புக்கு 48 மற்றும் 51 காசுகள் எனத் தூரங்களை அடிப்படையாகக் கொண்டு வசூலிக்கப்பட்டு வந்தது.இது டிசம்பரில் 44 காசுகளாகவும், 2017 ஆம் ஆண்டு மார்ச்சில் 31 காசுகளாகவும் குறைந்தது. அடுத்தடுத்து 27, 23 மற்றும் 19 காசுகளாகச் சரிந்த கட்டணம், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 16 காசுகளாக நிர்ணயிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை டிராயின் தரவுகள் தெரிவிக்கின்றன.
திடீர் வளர்ச்சி
மார்ச் 2011 க்கும் செம்பம்பர் 2016 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொலைத் தொடர்புத்துறையில் நீடித்து வந்த மந்தமான வளர்ச்சி, திடீரென அதிகரித்தது.மார்ச் 2011 வாக்கில் ஒரு மாதத்துக்கு 349 நிமிடங்களாக இருந்த குரல் அழைப்புச் சலுகை, செப்டம்பர் 2016 இல் 366 நிமிடங்களாக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 584 நிமிடங்கள் குரல் அழைப்புச் சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
ஜியோவின் தாக்கம்
ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய இலவச குரல் கொடுப்பனவால், மற்ற நிறுவனங்களுக்கு அழுத்தங்கள் ஏற்பட்டதாகச் செல்லுலர் ஆபரேசன் அசோசியேசனின் டைரக்டர் ஜெனரல் ராஜன் தெரிவித்தார். வரம்பற்ற குரல் சேவைகள் உள்ளிட்ட சலுகைப் பொதிகளை வழங்கிய ரிலையன்சின் ஜியோவால், மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் சலுகைகளை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 2018 இல முதல் காலாண்டில் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இழப்புகளைச் சந்தித்ததற்கு ஜியோவின் தாக்கம் தான் எனப்படுகிறது.